
வள்ளுவர் காட்டிய வைதீகம்
சாமி சிதம்பரனார்
14. புராணக் கொள்கைகள்
ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு உளார்கோமான்
இந்திரனே சாலும் கரி. (25)
ஐந்து புலன்களையும் அடக்கி ஆண்டவனுடைய வலிமையை விளக்குவதற்கு, பெரிய ஆகாய உலகத்தில் வசிக்கின்ற தேவர்களின் அரசனாகிய இந்திரனே போதுமான சாட்சி.
தவசிகளின் வலிமைக்கு இந்திரனே சாட்சியென்பது இதன் கருத்து. இப்பாடல் சில புராணக் கதைகளை நினைப்பூட்டுகிறது.
இந்திரன் வெள்ளை யானையின் மீது பவனி வந்து கொண்டிருந்தான். அப்பொழுது துர்வாச முனிவர், தான் மகாவிஷ்ணுவிடம் பெற்று வந்த மலர் மாலையைக் கொண்டு வந்து இந்திரனிடம் கொடுத்தார். அவன் அதை அலட்சியமாக தனது வஜ்ராயுதத்தால் வாங்கி யானையின் தலையில் போட்டான். யானை தனது தும்பிக்கையால் அந்த மாலையை இழுத்துக் காலின் கீழ்ப் போட்டுத் தேய்த்து விட்டது. உடனே துர்வாசர் இந்திரனைப் பதவியிழந்து பரிதவிக்கும்படி சபித்தார். அவன் சாபத்திற்கு உள்ளானான்.
கௌதமரின் மனைவி அகலிகைமேல் இந்திரன் காதல் கொண்டான். கௌதமர் வெளியே போயிருக்கும் சமயம் பார்த்து, இந்திரன் அவரைப் போல் உருவெடுத்து அகலிகையிடம் வந்து இன்பம் அனுபவித்தான். அச்சமயம் முனிவர் வந்து விட்டார். இந்திரன் பயந்து பூனை உருவத்துடன் வெளியில் ஓடினான். முனிவர் இந்திரன் தந்திரத்தை அறிந்து அவனுடைய உடம்பு முழுவதும் ஆயிரம் பெண் குறிகள் உண்டாகக் கடவது என்று சாபம் இட்டார். பிறகு தேவர்களின் வேண்டுகோளின் பேரில் அவை பிறருக்கு ஆயிரம் கண்களாகக் காணப்படும் என்று மாற்றினார்.
இந்திர பதவியைப் பெறக்கூடிய அளவுக்கு இவ்வுலகில் யாரேனும் தவம் செய்து கொண்டிருந்தால், அதனை இந்திரன் உட்கார்ந்திருக்கும் வெள்ளைக் கம்பளம், தனது அசைவினால் அறிவிக்கும். ஐம்புலன்களையும் அடக்கித் தவம் செய்வோர் இந்திர பதவியை அடைவர். ஆதலால் இந்திரன் உடனே அவர்கள் தவத்தைக் கெடுக்க முயல்வான். இவை போன்ற கதைகளை இப்பாடல் நினைப் பூட்டுகின்றது.
மடியிலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான்
தரஅயது எல்லாம் ஒருங்கு. (610)
சோம்பல் இல்லாத அரசன், மகாவிஷ்ணுவால் ஒரே அடியால் அளக்கப்பட்டதாகிய இவ்வுலகம் முழுவதையும் ஒரே மூச்சில் பெறுவான்.
மகாபலிச் சக்கரவர்த்தி யென்பவன் தன்னுடைய தபோ வலிமையால் மூன்றுலகங்களையும் அடக்கியாண்டான். தேவர்கள் எல்லாம் அவன்கீழ் அடங்கிக் கிடந்தனர். தேவர்கள் கஷ்டம் பொறுக்க முடியாமல், மகாபலியை அடக்கும்படி மகாவிஷ்ணுவை வேண்டிக்கொண்டனர். அவர் வாமனாவ தாரம் எடுத்து மகாபலியிடம் போய் மூன்றடி மண்யாசகம் கேட்டார். அவனும் அளந்து எடுத்துக் கொள்ளும்படி கூறினான். உடனே அவர் விவரூபம் எடுத்துப் பூமியை ஓரடியால் அளந்தார்; ஆகாயத்தை ஓரடியால் அளந்தார். மற்றோர் அடி எங்கே என்று கேட்க, மகாபலி தன் தலையைக் குனிந்தான். அவன் தலையின் மேல் ஒரு பாதத்தை வைத்து அழுத்தி அவனைப் பாதாளத்திற்கு அனுப்பி விட்டார். தேவர்கள் சுதந்தரம் அடைந்தார்கள். சந்தோஷப்பட்டார்கள். மாகவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் வாமானாவதாரமும் ஒன்று. இக்கதையை மேற்கண்ட குறள் நினைப்பூட்டுகிறது.
தாழ்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு. (1103)
தாம் ஆசைப்படும் பெண்களின் மெல்லிய தோள்களின் மேல் படிந்து தூங்குவதை விட, மகாவிஷ்ணுவின் வைகுந்த பதவியை அடைந்து வாழ்வது சுகந்தருமா?
வைகுந்தத்தை யடைந்து வாழும் பாகவதர்களுக்கு நித்திய சூரிகள் என்றுபெயர். வைகுந்தத்தை யடைந்தவர்கள் லக்ஷ்மி சமேதராய் வீற்றிருக்கும் பெருமாளை, அவர் எதிரில் உட்கார்ந்து சதாகாலமும் சேவித்துக் கொண்டே யிருப்பார்கள். இந்த வைஷ்ணவ மத தத்துவம் இப்பாடலில் இருக்கிறது. இதனால் பிர்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளையும் திருவள்ளுவர் ஒப்புக் கொள்ளுகிறார்.
கூற்றம் குதித்தலும் கைகூடும், நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்ட வர்க்கு. (269)
தவம் செய்வதாகிய வல்லமையில் ஈடுபட்டவர்க்கு எமனிடத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும் காரியமும் கைகூடும். தவம் செய்தோர் எம தண்டனைக்கு ஆளாகார்.
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல்
செல்லாது உயிர்உண்ணும் கூற்று. (326)
உலகத்தாரின் உயிரைக் கவர்கின்ற கூற்றுவன் கொல்லா விரதத்தைப் பின்பற்றி வாழ்கின்றவனுடைய ஆயுளின் மேல் கணக்கு வைத்துஅதைக் கவர்வதற்காக வரமாட்டான்.
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால், ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். (894)
திறமையுடன் காரியங்களைச் செய்து முடிக்கக் கூடியவர் களுக்கு, அத்திறமையில்லாதார் துன்பம் செய்வது, எமனைத் தானே கையால் அழைத்துக் கொள்வதுபோல் ஆகும்.
பண்டு அறியேன் கூற்று என்பதனை, இனிஅறிந்தேன்,
பெண்தங்கையால் பேர் அமர்க்கட்டு (1083)
கூற்றுவன் என்று நூல்களிலே சொல்லப்படுகிறவனை இதற்குமுன் நான் பார்த்ததில்லை. இப்பொழுது அறிந்தேன். அது பெண்தன்மையுடன் பெரிதாக வைக்கப்பட்ட கண்களையும் உடையது.
கூற்றமோ, கண்ணோ, பிணையோ, மடவரல்
நோக்கம் இம்மூன்றும் உடைத்து. (1085)
இப்பெண்ணின் பார்வை என்னைத் துன்புறுகின்றது; ஆதலால் எமனோ? என்னைக் கவனிக்கின்றது; ஆதலால் கண்தானோ? என்னைக் கண்டு மிரளுகிறது; ஆதலால் மானோ? இந்த மூன்று தன்மையும் இவள் கண்களில் உண்டு.
மக்களின் உயிரையும் உடம்பயும் வேறாகப் பிரிக்கும் கூற்றுவன் ஒருவன் உண்டு. அவனுக்கு எமன், காலன், தருமன், மறலி, என்ற வேறு பெயர்களும் உண்டு. அவனுக்குத் தனி உலகமும், தனித்தூதர்களும் உள்ளனர். அவன் பாபாத்மாக்களின் உயிரைப் பறித்துச்சென்று, பாபங்களுக்குத் தக்க தண்டனை விதிப்பான். இப்புராணக் கொள்கையை மேலே காட்டிய பாடல்கள் ஒத்துக்கொள்ளுகின்றன.
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டிவிடும். (167)
பிறர் செல்வத்தைக்கண்டு பொறாமைப் படுகிறவனைச் சீதேவி அடக்கி விடுவாள்; மூதேவியை அவனிடம் போகும் படி வழிகாட்டிவிடுவாள்.
மடிஉளாள் மாமுகடி என்ப, மடியிலான்
தான் உளாள் தாமரையினாள். (617)
செந்தாமரை மலரில் வசிக்கின்ற சீதேவியானவள் சோம்பல் இல்லாதவனுடைய முயற்சி காரணமாக அவனிடம் தங்கியிருப்பாள்; மூதேவியானவள் சோம்பேறயிடம் குடிபுகுந்திருப்பாள்.
செல்வத்தைக் கொடுப்பவள் சீதேவி. தரித்திரத்தைத் தருகிறவள் மூதேவி. இருவரும் சகோதரிகள். சீதேவி இளையவள்; தங்கை. மூதேவி மூத்தவள்; அக்காள். இது புராணீகர்களின் கொள்கை. மேலே காட்டிய பாடல்களில் இக்கொள்கை காணப்படுகின்றது.
அரும்செவ்வி இன்னாமுகத்தான் பெரும் செல்வம்
பேஎய்கண்டு அன்னது உடைத்து. (565)
தன்னைப் பிறர் சந்திப்பதற்கு இடங்கொடுக்காதவனும், சந்திப்பவர்களிடம் கடுகடுத்த முகத்துடன் பேசுகின்றவனு மாகிய ஒருவனிடம் மிகுந்த செல்வம் இருந்தாலும் அதனால் யாருக்கும் உபயோகம் இல்லை. அச்செல்வம் பேயினால் காக்கப்படுவது போன்ற செல்வமாகும்.
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து
அலகையா வைக்கப்படும். (850)
உலகில் உள்ளவர்கள் உண்டு என்று ஒப்புக் கொள்ளும் ஒருவிஷயத்தை, இல்லையென்று சொல்லுகிற ஒருவன், இவ்வுலகத்தில் ஒரு பேயாக வைத்து எண்ணப்படுவான்.
மேலேகாட்டிய பாடல்களிலிருந்து பேய் பிசாசுகள் உண்டு என்று அறிகிறோம்.
‘பொன்காத்த பூதம்’ என்பது பழமொழி. எங்கேனும் மனித சஞ்சாரம் இல்லாத இடத்தில் செல்வம் இருக்குமானால் அதைப் பேய்கள் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றன என்பது மக்கள் நம்பிக்கை. நிலத்தில் புதையல் இருந்தாலும் அதைப் பூதம் காத்துக்கொண்டிருப்பதாக நம்புகின்றனர்.
பாவம்செய்த மக்கள், அகாலமரணம் அடைந்த மக்கள் பேய் பிசாசுகளாகத் திரிகிறார்கள் என்பதும் புராணிகர்களின் கொள்கை. இக்கொள்கைகளை மேற்கூறிய பாடல்கள் ஆதரிக்கின்றன.
நோக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக் கொண்டன்னது உடைத்து. (1082)
அழகுடைய அவள், நான் அவளைப் பார்க்கும் போது அவளும் என்னைப்பார்த்தல், தானே தீண்டி வருத்துவதாகிய மோகினித் தெய்வம், தன்னுடைய சேனைகளையும் சேர்த்துக் கொண்டு என்னைத் தாக்குவதைப் போல இருக்கிறது.
மோகினிப்பேய் என்று ஒருவகைப்பேய் உண்டு. அது ஆடவர்களைக் கண்டு மோகம் கொள்வது போல் நடித்து அவர்களைத் துன்புறுத்தும். இப்பேயினால் பீடிக்கப் பட்டவர்கள் பிழைக்க மாட்டார்கள். ஒருவனைப் பார்த்து மோகிப்பது போலப் பாவனை செய்து ஏமாற்றுவது மோகினிப் பிசாசின் செய்கை. இக்கொள்கை சாதாரண மக்களின் நம்பிக்கை. இதையொட்டிப் பல கதைகள் கூறுவார்கள். இக்கொள்கையை மேலேயுள்ள பாடலில் காணுகின்றோம்.



