
என்னுரை
சாவி
10. திருச்சியில் பெரியார்
திருச்சியில் பெரியாரை பேட்டி காணச் சென்ற போது அவர் ‘வாங்கய்யா!’ என்று வாய் நிறையச் சொல்லி வரவேற்ற பண்பு கண்டு மெய்சிலிர்த்துப் போனேன்.
பழுத்த பழம் போல மேனி. உடல் தளர்ந்து போன வயோதிகம். அழுத்தம் திருத்தமான அவருடைய பேச்சில் உணர்ச்சி கொப்பளித்தது.
பேட்டி நடந்து கொண்டிருந்தபோது கரூரிலிருந்து கட்சித் தொண்டர்கள் சிலர் கும்பலாக ஐயாவைப் பார்க்க வந்திருந்தார்கள்
‘எங்கிருந்து வந்தீங்க?’ என்று விசாரித்தார் பெரியார்.
அடுத்த புதன் கிழமை கரூரில் மீட்டிங். நீங்க வந்து பேசணும் ஐயா ‘
‘ஏழரைமணிக்கு வச்சுக்குங்க. வந்துடறேன் அவர்கள் மகிழ்ச்சியோடு திரும்பிச் சென்றார்கள்.
‘இந்த வயசில் மீட்டிங், அது, இதுன்னு இப்படி அலையறீங்களே. முடியுதா?’ என்று கேட்டேன் நான்.
முடியுதாவது! ஒரு நாளைக்கு இரண்டு மூணு கூட்டத்துல கூடப் பேசறதுதான். முதல் முதல் நான் மீட்டிங் பேச போனப்ப, எவ்வளவு உற்சாகமாய்ப் போனேனோ, அதே உற்சாகத்தோட இன்றைக்கும் போய்க் கொண்டிருக்கிறேன். உழைக்கணும்யா, நல்லா உழைக்கணும், அப்படிப் பிடிவாதமாய்ப் பிரசாரம் செஞ்சாத்தான் நம்ம லட்சியத்துல் வெற்றி காணமுடியும்! என்றார்.
இந்த வார்த்தைகள் ஆணி அடித்த மாதிரி என் உள்ளத்தில் பதிந்துவிட்டன. அன்று பெரியார் அவர்களிடம் கற்றுக் கொண்ட பாடத்தை நான் இன்றுவரை என் வாழ்க்கையில் மறக்காமல் கடைப்பிடித்து வருகிறேன்.
முதல் முதல் பத்திரிகை அலுவலகத்தில் சேர்ந்த போது எத்தனை உற்சாகத்துடன் இருந்தேனோ, அதே உற்சாகம் இன்றளவும் இம்மியளவும் குறையவில்லை.



