
என்னுரை
சாவி
14. காமராஜ்
பல்வேறு தலைவர்கள் தங்களது பல்வேறு தனித்தன்மைகளால் என்னை வியக்க வைத்திருக்கிறார்கள் என்றாலும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் எளிமை அவற்றில் தலையாய இடம் வகிக்கிறது.
அவரிடம் எப்போதுமே எனக்கு ஆழ்ந்த அன்பும், மரியாதையும் உண்டு. பலமுறை நான் டெல்லிக்குப் பயணம் செய்தது அவருடன்தான். தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்ததும் அவருடன் தான். அந்தக் காலத்தில் அவரோடு நெருங்கிப் பழகிய காரணத்தால் அவருடைய எளிய வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்திருக்கிறேன்.
அவரது ஆடம்பரம் என் று எதையாவது சொல்லவேண்டும் என்றால் மூன்றுவேளை கதர்ச் சட்டை மாற்றுவதை மட்டுமே சொல்ல முடியும். சட்டை எப்போதும் பளிச்சென்று இருக்கவேண்டும்.
காரில் சுற்றுப் பயணம் போகும்போது ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய்க்குச் சில்லறை நாணயங்களாக மடியில் கட்டிவைத்துக் கொள்வார்.
‘எதுக்கு இவ்வளவு சில்லறை உங்களுக்கு?’ என்று கேட்டால் ‘போகிற வழியில் கார் நின்னுச்சினா, பிச்சை எடுக்கிறவங்க காரை சூழ்ந்துக்குவாங்க.காசு போட்டால் போயிடுவாங்க, அதுக்குத்தான்’ என்பார். கையில் கடிகாரம்கூடக் கட்டுவதில்லை. கேட்டால், ‘என்னைச் சுற்றித் தான் எப்பவும் யாராவது இருப்பாங்களே… டைம் கேட்டா சொல்லிட்டுப் போறாங்க.. தனியா நான் வேற ஏன் கட்டிக்கணும்னேன்…’ என்பார்.
ஒரு சமயம் நான் அவரிடம் ஓர் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டிருக்கிறேன்.
ஒரு தீபாவளி நெருக்கத்தில் அவருடன் டெல்லி போயிருந்த போது தமிழ்நாடு கெஸ்ட்ஹவுஸில் அவர் தங்கியிருந்த அறையிலேயே என்னையும் தங்கவைத்தார். இரவு தூங்கப்போகும் முன் எனது ‘வாஷிங்டனில் திருமணம்’ புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தார். அவர் அதை முடித்துவிட்டுத் தூங்கும்வரை என்னால் விழித்துக் கொண்டிருக்க முடியவில்லை. நான் தூங்கிப் போய்விட்டேன். வெகு நேரத்திற்குப் பின் அவர் என்னைத் தட்டி எழுப்பினார்.
‘என்ன இப்படி குறட்டை விடறீங்க… நானே குறட்டை விடுகிறவன்தான்… நீங்க என்னையும் மிஞ்சிட்டீங்க… உங்க குறட்டைச் சத்தம் என்னைத் தூங்கவிடாது போலிருக்கு. பக்கத்து ரூம்ல போய்ப் படுத்துக்குங்க’ என்று சொல்லி அனுப்பிவிட்டார். அந்த நேரத்திலும் மறக்காமல், ‘கதையைப் படிச்சு முடிச்சுட்டேன். நல்லா இருக்கு’ என்று பாராட்டத் தவறவில்லை.
ஏதோ குறட்டை விஷயத்திலாவது பெருந்தலைவர் காமராஜரை மிஞ்சமுடிகிறதே என்று எனக்குள் பெருமை!
எப்போதும் பயணத்தின் போது அவருடன் ஒரு பெட்டி வரும்.
டில்லியில் நான் அவருடன் தங்கியிருந்த போது எனக்குள் உள்ளுர ஒரு குறுகுறுப்பு. அந்தப் பெட்டிக்குள் அப்படி என்னதான் இருக்கும்? என் நிருபர் புத்தி என்னைக் குடைந்து கொண்டிருந்தது!
இவரோ பிரமச்சாரி-எளிய வாழ்க்கை. ஒருநாள் அந்தப் பெட்டியைத் திறந்து சோதனை போட்டுவிட வேண்டியதுதான் என்று என் மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டேன்.
ஒருநாள் அவர் காரியக் கமிட்டிக் கூட்டத்துக்குப் போயிந்தார். திரும்பிவர நேரமாகும் என்று தெரிந்தது.
அந்த நேரத்தில், ஒரு இரும்புச் சட்டத்தின் உதவியுடன் அந்தப் பெட்டியின் பூட்டை உடைத்துத் திறந்து விட்டேன்.
உள்ளே,
ஜான் கந்த்தர் எழுதிய ‘இன்ஸைட் ஆஃப்ரிக்கா’ புத்தகம், திருக்குறள், காண்டேகர், கம்பராமாயணம், மூன்று கதர்ச் சட்டைகள், ஒரு சேவிங்ஸெட், இரண்டு வேட்டி, மேல் துண்டு நாலு.
நான் இவற்றை ஆராய்ந்து கொண்டிருக்கையில் எதிர்பாராமல் காமராஜர் உள்ளே வந்து விட எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.
‘என்ன… என்ன… என்ன… பாக்கறீங்க?’ அவர் வருவதற்குள் என் துப்பறியும் வேலையை முடித்துவிட வேண்டும் என்ற முயற்சியில் தோற்றுப் போய், கைகால் வெலவெலத்து, அவர் முன்னால் அசடு வழிந்து எதையோ உளறிக் கொட்டினேன்.
ஒரு கணத்தில் எல்லாம் புரிந்து விட்டது அவருக்கு.
அடடே! கேட்டா நானே பெட்டியைத் திறந்து காட்டியிருப்பேனே நல்ல பெட்டியைப் பாழாக்கிட்டீங்களே!…’ (அது ஒன்றும் அப்படி நல்ல பெட்டியில்லை. பழசுதான்!)
‘இல்லை…பூட்டை சரிப்படுத்திடலாம் என்று நான் சொன்னதும், அவர் பூட்டையும் பெட்டியையும் அப்படி இப்படி அசைத்துப் பார்த்துவிட்டு ம்… சரியா வராது… கீழே தீனதாயள் இருப்பார். அவர் கிட்ட சொல்லி சரி செய்யச் சொல்லுங்க!’ என்று கூறிவிட்டு, சற்று நேரத்துக்கெல்லாம் மீண்டும் வெளியே புறப்பட்டுப் போய்விட்டார்.
பெருந்தலைவர் மரணச் செய்தி கிடைத்தவுடன் நான் ஒரு பூ மாலையுடன் திருமலைப்பிள்ளைத் தெருவுக்குப் பறந்தோடிப் போய், கண்ணீர் சிந்தியபடி அவருக்கு என் இறுதி அஞ்சலியைச் செலுத்திவிட்டுத் திரும்பினேன். செய்தி தீவிரமாகப் பரவாததால் கூட்டம் சேரவில்லை. போலீஸ் உயர் அதிகாரி நண்பர் பரமகுருவும், காமராஜரின் உதவியாளர் வைரவனும் மட்டுமே கண்கலங்கி நின்று கொண்டிருந்தார்கள்.
பின்னர் நண்பர் ராசாராம் அவர்கள் சொன்ன செய்தி காமராஜர் மீது எனக்கிருந்த மதிப்பை – அவரது எளியவாழ்க்கை மீது நான் கொண்டிருந்த வியப்பைப் பன்மடங்கு உயர்த்திவிட்டது.
அதாவது, காமராஜர் இறந்த அன்று அவரது பீரோவைத் திறந்து பார்த்தார்களாம்! அதில் வெறும் அறுபத்தேழு ரூபாய் மட்டுமே இருந்ததாம்!
இப்போதேல்லாம் என்னைப் பொறுத்தவரை என் தேவைகளை மிகவும் எளிதாக்கிக் கொண்டிருக்கிறேன். பயணம் போகும் போது வேட்டி, சட்டை தவிர வேறு எந்த டாம்பீகமும் கிடையாது.
காமராஜர், ராஜாஜி போன்ற தலைவர்களைப் பார்த்துப் பார்த்து என்னையுமறியாமல் எனக்குள் வளர்ந்து விட்ட பழக்கம் அது.



