
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
சுத்தானந்த பாரதியார்
11. மந்தாரை மலர்
தேரூரில் தேவியின் நண்பர் ஒருவருக்கு இளமையிலேயே திருமணம் ஆனது. வீட்டுக்கவலை அந்த நண்பரைப் பற்றிக்கொண்டது. மனைவி நீண்டநாள் பூப்பெய்தாக் குறை வேறு. வாலிபத்துடிப்பு மனைவியின் பூப்பை எதிர்பார்த்து ஏங்கியேங்கித் தவித்தது. ஆள் விரக்தியடைந்து மதுரைக்குப் போய்விட்டார். பிறகு தகவலில்லை. ஆண்டுகள் கழிந்தன. ஒருநாள் அவர் மனைவி பூப்பெய்திய செய்தி வந்தது. கவிஞர் துள்ளிக்குதித்து, பின்வரும் கவியை உடனே எழுதித் தமது நண்பருக்கு அனுப்பினார்.
“மந்தாரை மலர்ந்திருக்க மதுவுண்ணும் வண்டெங்கே?
மாமுல்லைக் கொடிபடர வளருங்கொள் கொம்பெங்கே? சிந்தாத மணியிருக்க வொளியெங்கே சென்றதெனத்
தேரூரிற் பலர் கூடித் தெரிந்துகொளக் கேட்டதற்கு,
நந்தாத பரஞான வமுதுண்டு தெவிட்டெறியும்
நற்பரமா னந்தவருள் பெறச்சென்று, நண்பாநீ வந்தாலே மறுமொழியும் வகுப்பமெனச் சோதிடநூல்
வல்லாருங் கூறுகின்றார்; வகையேதும் அறியேனே !”
இந்தப் பாட்டைக் கண்டதும் நண்பர் வந்தார்; மனைவியைக் கூடி இல்லறம் நடத்தி இன்புற்றார்!



