
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
சுத்தானந்த பாரதியார்
7. திருவனந்தபுரத்தில்
பெண்கள் கலாசாலைப் புலவர்மணி, திருவனந்தபுரம் அறிஞருக்கே கண்மணி போல விளங்கினார். அக்காலம் புலவர்மணி வையாபுரிப் பிள்ளையும், நீதிபதி சேஷையரும், அவர் மருமகன் கே. ஜி. சங்கரையரும், இன்னும் சில வித்துவான்களும் அங்கே இருந்தனர். எல்லாரும் தமிழில் தக்க படிப்பும், ஆங்கிலத்தில் பட்டமும், தமிழன் பும், ஆராய்ச்சியு முடையவர்கள். மாலைதோறும் இவர்கள் ஓரிடத்திற் கூடி, சங்கநூல்களையும் தமிழர் நாகரிகப் பண்பையும் ஆராய்வதுண்டு. சேஷையர் சேரநாட்டுச் சரித்திரம் எழுத இக்காலம் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். வையாபுரிப் பிள்ளை வரிசையாகத் தமிழாராய்ச்சி நடத்தினார்; அவர் மனமே தமிழில் தோய்ந்திருந்தது. இவர்களுடன் தேவியும், சிலப்பதிகாரம், பதிற்றுப் பத்து, சிந்தாமணி, புறநானூறு முதலிய அரிய நூல்களை ஆராய்ந் தார்; கல்வெட்டுகளையும் ஆராய்ந்து, தமிழர் வரலாற்றிலும் ஆழ்ந்துபார்த்தார். இதைப்பற்றி வையாபுரிப் பிள்ளையே மிகச் சிறப்பாகப் பேசியிருக்கிறார். 1920-ஆம் ஆண்டு மேற்கூறியவாறு புலமை சிறந்து விளங்கினார், தேவி.



