வாழ்க்கை இன்பம்
கா. சுப்பிரமணியப் பிள்ளை

20. குழந்தைப் பாதுகாப்பு

நன்றாய் வளர்க்கப்பெற்ற குழந்தைகள் முதுமையில் தளர்ச்சியடைவதில்லை. குழந்தைகளைக் கவனமாகப் பாதுகாக்கும் இடங்களில் தடையுமுன் இறக்குங் குழந்தைகள் நூற்றில் ஐந்தே. குழந்தைகளை நன்கு கவனியாத இடங்களில் நூற்றில் எழுபது குழந்தைகள் ஓராண்டு கழிவதன்முன் சாகின்றன. ஒரு வயதிற் குழந்தைகள் நிற்கும் பலம் அடைதல் வேண்டும். குழந்தைகளுக்கு நல்ல நார்த்தொட்டிலில், மெத்தை, கொசு வலை அமைத்த சுகமானதும் சுத்தமானதுமான படுக்கை அவசியம். மலசலம் படுமிடங்கள் அடிக்கடி சுத்தப்படுத்தப்பட வேண்டும். குழந்தை மேனியை அழுக்கில்லாதபடி வைத்தல் வேண்டும்.

பிறந்து ஐந்து அல்லது ஆறு மாதமானவுடன். பல் முளைக்குந் தருணத்தில், சுத்தமான வெள்ளிக் கரண்டி போன்ற கடினப்பொருளை வாயில் வைத்து, குழந்தை அதைக் கடிக்கும்படி செய்தல் வேண்டும். குழந்தை பால்குடிக்கும் பருவத்தில், தாய் சுத்தமான உணவே அருந்துதல் வேண்டும். எட்டு மாதம் வரை தாய்ப்பால் மாத்திரமே குழந்தைகளுக்குக் கொடுத் தல் நலம். அது குறைவுபடுமானால், கேழ்வரகுக்கஞ்சி போன்ற உணவு கொடுக்கலாம். தாயின் எச்சிலைக் குழந்தைக்குக் கொடுத்தல் கூடாது.

நல்ல பழங்களின் இரசத்தைக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். ஆரஞ்சு ரசம், மிக்க பயன் விளைப்பது. பழத்தைச் சில விநாடிகள் கொதிநீரில் வைத்தெடுத்து, அதன்பின் இரசத்தைப் பிழிதல் நலம். பாலுணவு அருந்தி ஒருமணி நேரங்கழித்தபின், பழவுணவைக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். தாய் பேதி மருந்து அருந்தின், அதன் சாரம் தாய்ப்பாலிற்கலத்தல் கூடுமாதலின், பிள்ளைக்குக் கெடுதலில்லாத பேதி மருந்தையே தாய் உட்கொள்ளல் வேண்டும். தாயின் கோபம் காரணமாகத் தாய்ப்பாலுக்கு நச்சுத்தன்மை ஏற்படுமாதலால், தாய் சாந்தமாயிருக் கும்போது குழந்தைக்குப் பாலூட்டுதல் வேண்டும். தாய் கோயுற்றால், சுத்தமான உடம்புடைய ஒரு செவிலியின்பாலே குழந்தைக்குக் கொடுக்கத்தக்கது. செவிலி நோயுற்றால், உடனே பால் கொடுக்க வேறு ஆளை நியமிக்க வேண்டும். சுத்தமான பசுவின்பால் அல்லது வெள்ளாட்டின்பால் கொடுக்கலாம்.

குழந்தைக்கு நோயில்லாத பசுவின் பாலைக் கொடுத்தல் வேண்டும். பாலில் பாதியளவு வெந்நீர் சேர்த்துக்காய்ச்சி, பதினாறில் ஒரு பங்கு சுண்ணநீர் (Lime water) சேர்த்து, அளவாகச் சீனி கலந்து கொடுத்தல் நன்றென்பர். குழந்தைக்குப் போ துமான அளவு தண்ணீர் குடிக்கக்கொடுத்தால், மலச்சிக்கல் இராது. கொதிக்க வைத்த நீரையே ஆற்றிக்கொடுத்தல் நலம். அன்னப்பால் கொடுத்தாலும், மலச்சிக் கல் நீங்கும்.

குழந்தைக்குக் கொடுக்கும்பாலில் நோய்ப்புழுக் கலந்திருந்தால், வயிற்றோட்டம் ஏற்படும்.

அப்போது உணவு சீரணமாகாமல், உடம்பு மெலியும். அழுக்கான இடங்களிற்குழந்தைகளைத் தவழ விடு தல் கூடாது. குப்பைகளை வீட்டிற்கருகிற் குவித் தல் கூடாது. இனிப்புப்பண்டங்களைக் கடையில் வாங்கிக் குழந்தைகளுக்குக் கொடுத்தல் தவறு. பாலை நிறுத்திச் சோற்றுக்கஞ்சியை, வயிற்றோட்டங் கழியும் வரை கொடுத்தல் நன்று. ஆரஞ்சு ரசம் கொடுக்கலாம். விளக்கெண்ணெயை மிகக் குறைவாகக் கொடுக்க வேண்டும். உப்புக்கலந்த நீரினால் எனிமாக்கொடுக்கலாம். குழந்தை வயிற்றை இலேசான துணியால் மூடி வைக்க வேண்டும்.

குழந்தைகளுக்குக் கை கால் இழுப்பு ஏற்பட் டால், சூடான நீரிற் குழந்தையைக் குளிப்பித்து, தலையில் மாத்திரம் ஈரத் துணியைப்போட்டுச் சில நிமிடங்கழிந்த பின் அதற்கு வெந்நீர் எனிமாக் கொடுத்து, ஒரு தேயிலைக்கரண்டிச் சிற்றாமணக்கு நெய் கொடுக்கலாம். மலச்சிக்கலை ஒழித்தால், இழுப்பு நிற்கும். எலும்புப் பலவீனத்தால் வரும் பிடிப்பை நீக்குவதற்கு வளமான பாலும் பழரசமும் கொடுத்தல் நலம். குழந்தைக்குக் குளிராவது இரு மலாவது உண்டானால், வெந்நீர் எனிமாக் கொடுத்த பின், சூடான பழரசம் கொடுத்து, நெஞ்சில் வெந்நீர் ஒற்றடம் 15 நிமிடம் வரை கொடுப்பது நலம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *