இருளும் ஒளியும்
சரோஜா ராமமூர்த்தி

12. ரகுபதியின் கோபம்

மாடிக்குச் செல்லும் மனைவியைச் சற்றும் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த ரகுபதி, கோபத்துடன் மனைவியை “சாவித்திரி! சாவித்திரி!” என்று இரைந்து கூப்பிட்டான். ஸரஸ்வதி பயந்து போய் முகம் வெளுக்க ரகுபதியின் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றாள். அவன் கூப்பிட்ட தற்கு மாடியிலிருந்து பதில் ஒன்றும் வராமற்போகவே திடுதிடு வென்று மாடிப்படிகளில் ஏறினான் ரகுபதி. அவன் பின்னால் சென்ற ஸரஸ்வதியும், ஸ்வர்ணமும் சாவித்திரியைப் பார்த்து விட்டு ஒருகணம் திகைத்து நின்றார்கள். பிறகு ஸ்வர்ணம் பொங்கி எழும் கோபத்தை அடக்கிக்கொண்டு, “நன்றாக இருக்கிறது சாவித்திரி! வெள்ளிக்கிழமையும் அதுவுமாக!” என்றாள்.

“சாவித்திரி! இதென்னம்மா இப்படி அழுகிறாய்? எழுந்திரு” என்று அவள் கரங்களை அன்புடன் பற்றினாள் ஸரஸ்வதி.

சாவித்திரி கண்ணீர் வழியும் முகத்துடன் கணவனைத் திரும்பிப் பார்த்தாள். பிறகு ஆத்திரம் தொனிக்க, “என் பிறந்த வீட்டில் கூட என்னை யாரும் வற்புறுத்த மாட்டார்கள். இங்கே . …” என்று மேலும் கூறாமல் தேம்பித் தேம்பி அழுதாள்.

ரகுபதிக்குச் சற்று தணிந்திருந்த கோபம் பீறிட்டு எழுந்தது.

“இங்கே உன்னை வாணலியில் போட்டு வதக்கி, தாலத்தில் எடுத்து வைக்கிறார்கள்! நீ பிறந்த வீட்டில் சுதந்தரமாக வளர்ந்த லக்ஷணம் தான் இப்போது தெரிகிறதே!” என்று கேலியும், ஆத்திரமும் கலந்த குரலில் கூறினான் ரகுபதி.

“என்ன தெரிகிறதாம்?” என்று கணவனைப் பதில் கேள்வி கேட்டு மடக்கிவிட்டதாக நினைத்து, நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டாள் சாவித்திரி.

” உன் லக்ஷணம்! உன் பிடிவாதம்! வேறு என்ன கிடக்கிறது தெரிகிறதற்கு?” என்று ஆவேசத்துடன் கூறிவிட்டுப் பொறுமையை இழந்தவனாக ரகுபதி கீழே உட்கார்ந்திருந்த மனைவியின் கன்னத்தில் பரீரென்று அறைந்தான். அடுத்த விநாடி அவன் தன் தவறை உணர்ந்து கொண்டான். இது வரையில், பெற்ற தாயின் மனம் நோகும்படி ரகுபதி பேசி அறியமாட்டான். உடன் பிறந்தவளைப்போல் அவனுடன் ஒன்றாக வளர்ந்துவரும் ஸரஸ்வதியின் கண்களில் கண்ணீரைக் கண்டால் அவன் நெஞ்சு உருகிவிடும். பெண்களை மலரைப்போல் மென்மையாக நடத்தவேண்டும் என்னும் கொள்கையை உணர்ந்தவன். தன்னுடைய அருமை மனைவியைத் தொட்டு அடிப்பதற்கு மனம் வருமா? கை தீண்டி அடிக்கும்படியான நீச மனோபாவம் தனக்கு
ஏன் ஏற்பட்ட்து என்பதை ரகுபதியால் உணர முடியவில்லை.

ஸ்தம்பித்து உணர்விழந்து நிற்கும் மகனை ஸ்வர்ணம் கண்களில் நீர் பொங்க ஏறிட்டுப் பார்த்து. “சீ! சீ! உனக்குப் புத்தி கெட்டுவிட்டதாடா ரகு? ஊரார் பெண்ணை அடிக்க உனக்கு என்னடா அப்படிப் பாத்தியம் ஏற்பட்டுவிட்டது? ஊரிலே நாலுபேர் என்ன சொல்லமாட்டார்கள்? புருஷன் – மனைவி தகராறு என்று உலகம் ஒத்துக்கொள்ளாது அப்பா. நடுவில் நான் ஒருத்தி இருக்கிறேன் பாரு” என்றாள். அவள் கண்கள் கண்ணீரால் நனைந்திருந்தன.

ஸரஸ்வதி ரகுபதியைத் தன் அழகிய விழிகளால் சுட்டு விடுவதுபோல் விழித்துப் பார்த்தாள். மானைப்போல் மருண்டு பார்க்கும் பார்வை ஒரு விநாடி அனல் பொறிகளை உதிர்த்தது.

“ரொம்ப அழகாக இருக்கிறது அத்தான்! உன்னுடைய போக்கு கொஞ்சங்கூட நன்றாக இல்லை. என்னாலேதானே இந்தத் தொந்தரவுகள் எல்லாம் ஏற்படுகின்றன? நான் எங்கேயாவது தொலைந்துபோகிறேன்” என்று படபட வென்று கூறிவிட்டு, கன்னங்களில் வழியும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.

ஸரஸ்வதி கூறியதைக் கேட்டதும், சாவித்திரி ‘விசுக்’ கென்று எழுந்து ”எனக்காக இங்கிருந்து யாரும் போக வேண்டாம். எனக்கும் என் மனுஷாளைப் பார்க்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. நானே புறப்பட்டுப்போகிறேன். ஆமாம்….” என்று கூறி, பீரோவிலிருந்து புடைவைகளை எடுத்துப் பெட்டியில் வைக்க ஆரம்பித்தாள்.

தலையில் அடிபட்ட நாகம்போல் ரகுபதியின் கோபம் மறு படியும் ‘புஸ்’ – என்று கிளம்பியது. அவன் அலட்சியத்துடன் அவளைப் பார்த்து, “பேஷாய்ப் போயேண்டி அம்மா: நீ இல்லாமல் இந்த உலகம் அஸ்தமித்துவிடப்போகிறதா என்ன?
ஹும்.. ஹும் . . என்னவோ மிரட்டுகிறாயே?” என்றான்.

“நன்றாக இருக்கிறதடா நீ அவளைப் போகச் சொல்லுகிறதும், அவள் புறப்படுகிறதும்! பிறந்தகத்திலிருந்து வந்து நான்கு மாசங்கள் கூட முழுசாக ஆகவில்லை. அம்மா, அப்பாவைப் பார்க்க வேண்டுமானால், சண்டை கூச்சலில்லாமல் சௌஜன்யமாகப் போகிறது தான் அழகு” என்று வேதனை தொனிக்கும் குரலில் கூறினாள் ஸ்வர்ணம்.

ரகுபதி கோபத்துடன் தாயை உறுத்துப் பார்த்துவிட்டு, மாடியிலிருந்து கீழே இறங்கிச் சென்றான். சாவித்திரி தன்னை எவ்வளவுதான் சுட்டுப் பேசினாலும், ஸரஸ்வதியின் கபடமற்ற மனம் அதைப் பாராட்டாமல், அவளை எப்படியாவது ஊருக்குப் போகவிடாமல் தடுக்கவேண்டும் என்று ஆசைப்பட்டது. ஆகவே அவள் அத்தை ஸ்வர்ணம் கீழே சென்றபின்பு உரிமையுடன் சாவித்திரியின் பக்கத்தில் உட்கார்ந்து அவள் தோள் மீது தன் கையை வைத்து, “சாவித்திரி! அசட்டுத்தனமாக இப்படி யெல்லாம் செய்யாதே அம்மா. அத்தானின் மனசு தங்கமானது. தங்கத்தை உருக்கி, எப்படி இழுத்தாலும் வளைவது மாதிரி அவன் மனசை நீ அறிந்து, அதன்படி நடந்து கொண்டால் நன்றாக இருக்கும். அத்தையும் பரம சாது” என்றாள்.

கணவனின் அடியால் ‘விறு விறு’ என்று வலிக்கும் தன் கன்னத்தின் எரிச்சலுடன், ஸரஸ்வதியின் அன்பு மொழிகள் அவளுக்கு ஆறுதலைத் தராமல், மேலும் எரிச்சலை மூட்டின.

“எல்லோருடைய குணமுந்தான் தெரிந்து விட்டதே! இனி மேல் தெரிவதற்கு என்ன இருக்கிறது? யார் வேண்டுமானாலும் தங்கமாக இருக்கட்டும், வைரமாக வேண்டுமானாலும் இருக்கட்டும்! ‘எனக்கு அதெல்லாம் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.’ ‘நான் போகத்தான் வேண்டும்” என்று சாவித்திரி அழுத்தந்திருத்தமாகக் கூறிவிட்டுத் துணிமணிகளை அடுக்கி வைத்துக்கொண்டிருந்தாள். ஸரஸ்வதி முகவாட்டத்துடன் அங்கிருந்து போய்விட்டாள்.

அன்றிரவு படுக்கை அறைக்குள் வந்த – கணவனிடம் வேறெதுவும் பேசாமல், சாவித்திரி, “நாளை காலை வண்டிக்கு என்னை எங்கள் ஊருக்கு ரெயில் ஏற்றிவிடுகிறீர்களா?” என்று கேட்டாள். ரகுபதியின் கோபம் அதற்குள் முற்றிலும் தணிந்துவிட்டது. அவன் புன் சிரிப்புடன் அவள் கைகளாப் பற்றிக்கொண்டு. ”சாவித்திரி! அடித்துவிட்டேன் என்று கோபமா உனக்கு? அடிக்கிற கை, அணைப்பதும் உண்டு என்பதை நீ தெரிந்து கொள்ளவில்லையே! உன்னை ஊருக்கு அனுப்பிவடடு. நான் தனியாக இங்கே இருக்கமுடியுமா சொல்?” என்றான்.

சாவித்திரி அவன் பிடியிலிருந்து தன் கைகளை உதறி விடுவித்துக் கொண்டாள். பின்பு அவனை ரோஷத்துடன் நிமிர்ந்து பார்த்து, “உங்களால் ரெயில் ஏற்றிவிடமுடியுமா, முடியாதா என்பதைச் சொல்லுங்கள்! வேறு எந்த ராமாயணமும் எனக்கு வேண்டாம்!” என்று கூறிவிட்டு வழக்கம்போல் போர்வையை உதறிப் போர்த்திக்கொண்டு படுத்துவிட்டாள்.

அதே சமயத்தில் சமையலறையில், சாப்பாட்டுக்கு அப்புறம் ஸ்வர்ணமும், ஸரஸ்வதியும் மெதுவான குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“என்னம்மா ஸரஸு! இப்படிப்பட்ட சண்டியாக வந்து வாய்த்திருக்கிறதே” என்று ஸ்வர்ணம் கவலையுடன் கேட்டாள் ஸரஸ்வதியை.

ஸரஸ்வதியின் மனதில் வேதனை நிரம்பியிருந்தது. முகத்தை ஒரு தினுசாக அசைத்து அவள், “இந்த அத்தானிடமும் தவறு இருக்கிறது அத்தை. அவள் இஷ்டப்படி இருந்துவிட்டுப் போகட்டுமே!” என்றாள்.

ஸ்வர்ணம் பழைய நாளைய மனுஷி. புருஷன் சொல்லி மனைவி கேட்டு பக்தியுடன் நடந்து கொள்ளவேண்டும் என்கிற பண்பாட்டில் ஊறிப்போனவள். அத்துடன் தன் செல்லப் பிள்ளையின் மனம் நோகும்படி எதிர்த்துப் பேசிய சாவித்திரியிடம்
அவளுக்கு அடங்காத கோபம் ஏற்பட்டிருந்தது.

“நாளைக்கு. ஊரில் போய் இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி, நமக்குக் கெட்ட பெயர் வாங்கிவைக்குமோ என்னவோ இந்தப் பெண்! இப்படி ஒரு பிடிவாதமா ஒரு பெண்ணுக்கு!” என்று அதிசயப்பட்டாள் ஸ்வர்ணம்.

“என்னவோ போ அத்தை! எனக்குத் தெரிந்ததை நான் சொல்லுகிறேன். இதையெல்லாம் பார்த்தால் எனக்குப் பயமாக இருக்கிறது” என்று பயந்த மனத்துடன் கூறினாள் ஸரஸ்வதி.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *