இருளும் ஒளியும்
சரோஜா ராமமூர்த்தி

35. ‘ நான் ஏழைப் பெண்’

தீபாவளிப் பண்டிகைக்கு அப்புறம் கிராமம் மறுபடியும் அமைதியில் ஆழ்ந்துவிட்டது. தங்கம் முன்னைப்போல ’ரகுபதி’ யிடம் அதிகம் பேசுவதில்லை. ‘படித்தவர் என்று சொல்லிக் கொள்கிறாரே தவிர, கொஞ்சமாவது நல்லது கெட்டது தெரிய வில்லையே இந்த அத்தானுக்கு!’ என்று நினைத்துக்கொண்டாள் தங்கம். ஏற்கனவே ஊரார் அவளைக் கல்யாணம் ஆகாமல் குதிர் மாதிரி நிற்பதாக வர்ணித்து வந்தார்கள். குதிரை மாதிரி திரிவதாகவும் கதை கட்டியிருந்தார்கள். வாயாடி என்று வேறு நாமகரணம் சூட்டி இருந்தார்கள். ’கன்னாபின்னா’ என்று பல்லைக் காட்டும் கிராமத்து வாலிபர்களுக்குத் தங்கத்தைக் கண்டாலே சிம்ம சொப்பனம்! ஏரிக்கரையில் அவளிடம் அசம்பாவிதமாக நடந்து கொண்ட வாலிபன் ஒருவனுக்குத் தங்கத்தை நினைத்த போதெல்லாம் முதுகிலே யாரோ சாட்டையால் ‘சுளீர் , சுளீர்’ என்று அடிப்பது போல் பிரமை ஏற்படுவதுண்டு. துணிகளைத் துவைக்கும் தங்கத்தின் எதிரில் சிரித்துக் கொண்டே நின்றதன் பலனை அனுபவித்திருந்தான் அவன். தங்கம் அவனை ஏறிட்டுக்கூடப் பார்க்கவில்லை. பச்சைத் தண்ணீரில் புடைவையை நனைத்து முறுக்கிப் பிழிந்து கல்லின் மீது ‘பட் பட்’டென்று அடித்தாள். வேகமாக சுழற்றிச் சுழற்றி வீசினாள். ‘சுளீர்’ என்று ஜலம் வேகமாக வாலிபனின் முகத்தில் தெறித்தன. அவன் முதுகைத் திருப்பிக்கொண்டு நின்றபோது ‘சுரீர்’ என்று முதுகில் தெறித்தன. அவன் திரும்பிப் பார்த்தபோது தங்கம் புடைவையை முறுக்கிப் பிழிந்து கையை ஓங்கிக் கொண்டு நின்றிருந்தாள். வாலிபனின் எண் சாண் உடம்பும் ஒரு சாணாகக் குறுகியது. அன்றுமுதல் தங்கத்தை அவன் கோவிலில் வணங்கும் பர தேவதையாக நினைத்தான். அவள் இருக்கும் திசைக்கே ஒரு கும்பிடு போட் டான்! அவள் ரொம்பவும் கண்டிப்புக்காரி என்பதைக் கிராமத்து ஏழை ஜனங்கள் புரிந்து கொண்டிருந்தார்கள். ’தங்கம்மா எத்தனை வருசம் கல்யாணம் கட்டிக்காமல் இருந்தாலும் பரவாயில்லை அம்மா. அது துரோபதை மாதிரி தன்னைத்தானே காப்பாத்திக்கும். அஞ்சு புருசன் இருந்தும் துரோபதை அம்மாளை யாரம்மா காப்பாத்தினாங்க? நம்ப தங்கம்மாவுக்கு அந்தச் சாமர்த்தியம் இருக்குது. அர்ச்சுன ராஜாமாதிரி நல்ல புருசனா அதுக்குக் கிடைப்பாங்க. கவலைப்படாதீங்க!’ என்று அலமுவுக்கு ஆறுதல் கூறுவார்கள்.

சிப்பியிலே நல்முத்து விளைகிறது. பட்டுப் புழுவில் அதி அற்புதமான பட்டு உற்பத்தியாகிறது. சேற்றிலே செந்தாமரை மலர்கிறது. ஈசன் வண்ண மலர்களில் மட்டும் துவைத் தேக்கி வைக்கவில்லை. அழகு விளைவதற்கு நல்ல இடங்கள் தாம் வேண்டும் என்பதில்லை. சமதிருஷ்டியுடன் அவன் எல்லா இடங்களிலும் அழகைத் தேக்கி வைத்திருக்கிறான். படித்த பெண்களுக்கு இல்லாத சில அரிய பண்பாடுகள் தங்கத்தினிடம் நிரம்பி இருந்தன. எல்லோரையும் மரியாதையாகக் கௌரவிக்கத் தெரியும் அவளுக்கு; நாலு பேரை மதித்து நாலு வார்த்தைகள் பேசத் தெரியும்; செய்துவிட்ட குற்றத்தை உணர்ந்து மன்னிப்புக் கேட்கும் பண்பும் அவளுக்குத் தெரியும். பிறவியுடன் அறிவு பிறந்துவிடுகிறது. அதை வளர்க்கத்தான் கல்வி அறிவு பயன் படுகிறது. சிறந்த பண்பாட்டைப் பெண்கள் பெற அதற்கேற்ற குடும்பச் சூழ்நிலை அவசியமாகிறது. உள்ளத் தூய்மையும், அகந்தையற்ற தன்மையும் உள்ள பெரியவர்களிடை குழந்தைகள் வளர்ந்து வந்தால் அவர்கள் குணத்தை இவர்களும் அடை கிறார்கள். போலிக்கௌரவமும், ஒருவரையும் மதியாத சுபாவமும் நிறைந்த கூட்டத்தில் வளரும் குழந்தைகள், அந்த மனப்பான் மையைத்தான் வளர்த்துக் கொள்வார்கள். தப்பித் தவறி எங்கோ விதி விலக்காகச் சிலர் இருப்பதைப் பார்க்கலாம். பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறது.

தங்கத்தின் மனம் எவ்வளவு தெளிவாக இருக்கிறதோ அவ்வளவு கண்டிப்பும் நிறைந்திருந்தது. ஆரம்பத்தில் ரகுபதி அவளிடம் சகோதர அன்புடன் பழகி வருவதாக நினைத்திருந்தாள். வரவர அவன் பித்தனைப்போல் நடப்பதை அறிந்து பயந்தாள். ‘தங்கத்தைத் தனியாகச் சந்தித்துப் பேசவேண்டும் என்கிற அவசியம் ரகுபதிக்கு இல்லை. அவளிடம் அவன் அந்த ரங்கமாகச் சம்பாஷிப்பதற்கு என்ன இருக்கிறது? எல்லோர் எதிரிலும் தாராளமாகப் பேசலாம். ஆனால், ரகுபதி அவளிடம் தனித்துப் பேச பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொண்டான். ஏரிக்கரைக்குத் தங்கம் போனால் அங்கே அவனும் விரைந்தான்.. கிராமத்து வாலிபர்களைச் சுட்டுப் பொசுக்கும் தங்கம், ரகுபதி யோடு தனித்து உரையாடுவதை அவர்கள் பார்த்தால் சும்மா விடுவார்களா?’

ஒரு நாள் அதிகாலையில் ஏரியில் குளித்து விட்டுத் திரும்பும் தங்கத்தைக் கோவிலில் சந்தித்தான் ரகுபதி. குடலை நிறையத் தங்க அரளிப் புஷ்பங்களைப் பறித்து நிரப்பிக்கொண்டு வந்து நின்றிருந்தாள் தங்கம், பொழுது இன்னும் நன்றாக விடியவில்லை. அவளுக்கு மனசிலே ஆயிரம் குறைகள் உண்டு. அதைக் கோவிலில் வந்து தெய்வத்தினிடம் முறையிட்டுக்கொள்வது அவள் வழக்கம். அதைக் கலைப்பதற்கு வந்த ரகுபதியை அவள் அங்கே சந்திக்க விரும்பவில்லை.

” என்ன அத்தான்! இவ்வளவு காலையில் வந்து விட்டீர்கள்!” என்று சொல்லாமல் சொல்லி விளங்கவைக்தாள் தங்கம்.

“வந்துவிட்டேன்! வரக்கூடாதா தங்கம்? உன்னைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறேன்.”

”வேடிக்கைதான்! பொழுது விடிந்து பொழுது சாய்வதற்குள் வீட்டிலே பல முறைகள் பார்ப்பவளைக் கோவிலில் அதிசயமாகப் பார்க்க வந்தாராமே!’ என்று வியந்தாள் தங்கம்.

இருந்தபோதிலும் பொறுமையை இழக்காமல், “வீட்டிலே பேசிக்கொண்டால் போயிற்று. அதற்காக என்னை இங்கே தேடி வர வேண்டுமா என்ன? இது கிராமாந்திரம் அத்தான்! உங்கள் நகரத்திலே குற்றங் குறைகள் யாருடைய கண்களிலும் அவ்வளவாகத் தென்படாது. குற்றத்தைக்கூட ஒரு நாகரிகம் என்று நினைத்து ஒதுங்கிப் போவார்கள். இங்கே அப்படி இல்லை: ஒன்றுக்குப் பத்தாகக் கதை கட்டிவிடுவார்கள். ஆமாம்….!”

ரகுபதி அவளைப் பார்த்து அழகு காட்டும் பாவனையாக, “ஆமாம்!” என்றான்.

“உன்னை என்னவோ என்று நினைத்திருந்தேன். நன்றாகப் பேசுகிறாயேடி அம்மா நீ! பெண்களே பேச்சில் வல்லவர்கள் என்று நினைக்கிறேன்!” என்று கூறிவிட்டு அவள் கையிலிருந்த புஷ்பக் குடலையைப் பற்றி, “இங்கே கொண்டு வா அதை. நான் எடுத்து வருகிறேன். தோளில் ஈரத் துணிகளின் சுமை அழுத்துவது போதாது என்று கையிலே வேறு!” என்று கூறிக் குடலையை வாங்கினான்.

தங்கம் பதறிப்போனாள். சட்டென்று குடலையை நழுவ விடவே அது கீழே விழுந்து மலர்கள் சிதறிப்போயின. மை தீட்டிய விழிகளால் அவனைச் சுட்டுவிடுவது போலப் பார்த்தாள் தங்கம்.

“அத்தான்! என் பெயருக்கு மாசு கற்பிக்காதீர்கள். என்னைத் தனியாக வந்து எங்கேயும் சந்திக்க வேண்டாம். மாசற்றவளாக இருக்கும்போதே என்னைச் சமூகம் கீழே தள்ளி மிதிக்கிறது. பிறகு கேட்கவே வேண்டாம். நான் ஏழைப் பெண் அத்தான்!” என்று கூறிவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு நடந்து விட்டாள் தங்கம்.

பெண் குலத்தின் பெருமையைக் கலையின் மூலம் உயர்த்த வேண்டும் என்று பாடுபட்டு வந்த ரகுபதியா அவன்? சந்தர்ப்பக் கோளாறுகளால் அவன் ஏன் இப்படி மாற வேண்டும்? கணவனின் நன்மை தீமைகளில் பங்கு கொள்ளாத மனைவியை அடைந்த குற்றந்தான் காரணமாக இருக்க வேண்டும். சாவித்திரிதான் அவன் இப்படி மாறி வருவதற்குக் காரணமானவள்.

ரகுபதி இனிமேல் கிராமத்தில் இருப்பதில்லை என்று தீர்மானித்துக் கொண்டான். அன்றே பகலில் சாப்பிடும்போது அலமுவிடம், “அத்தை! ஊருக்குப் போகிறேன். அம்மாவை விட்டு வந்து எவ்வளவோ நாட்களாகின்றன. ஸரஸ்வதியும் ஊரில் இல்லை!” ” என்றான்.

“இவ்வளவு நாட்கள் இங்கே இருந்துவிட்டு உன் வேட்டகத்துக்குப் போகாமல் திரும்புவது நன்றாக இல்லை ரகு. போய் உன் மனைவியை அழைத்துப் பாரேன். என்னவோ அப்பா எனக்குத் தெரிந்ததைச் சொல்லுகிறேன். அந்த வீட்டுக்கு உங்களால்தான் ஒளி ஏற்படவேண்டும். மன்னிக்கு ஒன்றுமே தெரியாது. பாவம், அவள் மனம் புழுங்கிச் சாகிறாள் ரகு. அவளுக்காகவாவது நீ சாவித்திரியுடன் வாழ்ந்துதான் ஆகவேண்டும்!” என்று உருக்கமாகக் கூறினாள் அலமு.

ரகுபதி எவ்விதத் தீர்மானத்துக்கும் வராமல் பெட்டி, படுக்கையைக் கட்டிக் கூடத்தில் வைத்துவிட்டு வெளியே போய் விட்டான்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *