இருளும் ஒளியும்
சரோஜா ராமமூர்த்தி

28. மைசூரில்

ரகுபதியும் ஸரஸ்வதியும் ஒன்றாகவே ரெயில் நிலையத்துக்கு வந்தார்கள். சற்று முன்பாக ரெயில்கள் கிளம்பின. இருவரும் ஒவ்வோர் ஊரைக் குறிக்கோளாக வைத்துக்கொண்டு பிராயணச் சீட்டுகள் வாங்கியிருந்தார்கள். ரகுபதியின் பிரயாணம் பாதியில் நின்றது. சட்டென்று என்னவோ தோன்றவே ஒருவித யோசனையுமின்றி ரெயிலிலிருந்து அவன் இறங்கி விட்டான். ஸரஸ்வதியின் மனம் களங்கமற்று இருந்தது. இவ்வளவு காலம் மனத்தைப் பீடித்திருந்த கவலையும் ஒருவாறு நீங்கிவிட்டதல்லவா? அத்தான் ரகுபதி தன் மனைவியை அழைத்துவரப் புறப்பட்டுவிட்டான். இனிமேல் அத்தை ஸ்வர்ணத்தின் கவலைகளும் நீங்கிவிடும். ஆகவே, ரெயில் புறப்பட்டவுடன் படுக்கையை உதறிப் போட்டுக்கொண்டு படுத்தவள் விடியுமளவு நன்றாகத் தூங்கினாள். காலைக் கதிரவனது கிரணங்கள், ஓடும் ரெயிலின் ஜன்னல் வழியாகத் தன் மீது பட்டவுடன்தான் ஸரஸ்வதிக்கு விழிப்பு ஏற்பட்டது. செந்தமிழ் நாட்டைக் கடந்து மைசூர் ராஜ்ய எல்லைக்குள் ரெயில் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. காவிரி நதி பாய்ந்து வளம் பெற்று இருப்பதால் எங்கு பார்த்தாலும் பசுமை போர்த்த காடுகளும், சிறு குன்றுகளும், புதர்களும் நிறைந்து பார்ப்பதற்குப் ‘பசேல்’ என்று காட்சி அளித்தது. தமிழ் நாட்டிலே ‘சுரீரென்று மக்களைத் தாக்கும் கதிரவன், மைசூர் ராஜ்யத்தில் சற்று நிதானமாகவே பவனி வருகிறான். பனி தோய்ந்த பள்ளத்தாக்குகளில் புகை போல் பனி மூடியிருக்கும் மலைச் சாரலில் அவன் ஜம்பம் ஒன்றும் சாயவில்லை.

ஓடும் ரெயில் ஒரு சிறிய கிராமத்தினூடே செல்லும்போது தலையில் தயிர்க் கூடைகளுடனும், மைசூருக்கே உரித்தான செழுமையான காய்கறிகள் கூடைகளுடனும் பெண்கள் அணியாகக் கேழ்வரகுக் கொல்லைக்குள் புகுந்து செல்வதை ஸரஸ்வதி கண்டாள். காலை ஒன்பது மணிக்கு மேல் ரெயில், ஸ்ரீரங்கப் பட்டணத்தை அடைந்தது. நிலையத்தில் அவளை அழைத்துப் போவதற்கென்று அவளுடைய தகப்பனார் வந்திருந்தார். பெரிய உத்தியோகத்தில் இருப்பவர். அந்தஸ்து வாய்ந்தவர் என்பதற்கு அறிகுறியாக அவருடன் நாலைந்து பேர்கள் வந்திருந்தார்கள். வண்டியிலிருந்து இறங்கியதும் ஸரஸ்வதி அன்புடன், ”அப்பா” என்று அழைத்து அவர் அருகில் சென்று நின்றாள். ” எப்படியம்மா இருக்கி? நீ மட்டுமா தனியாக வந்தாய்?” என்று ஆதுரத்துடன் மகளைக் கேட்டு, ஆசையுடன் அவள் முதுகில் தட்டிக் கொடுத்தார். அவருடன் வந்திருந்த நண்பர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார்கள். தகப்பனாரும், அவர் நண்பரும் பின் தொடர ஸரஸ்வதி வெளியே சென்று தயாராக இருந்த வாடகை மோட்டாரில் ஏறிக் கொண்டாள்.

‘அப்பாதான் எவ்வளவு மாறிவிட்டார்! மூன்று வருஷங்களுக்கு முன்புகூட இள வயதினர் போல இருந்தாரே! இப்பொழுது தலையில் லேசாக வழுக்கை விழுந்து விட்டதே!’ என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டாள் சரஸ்வதி.

‘குழந்தை நன்றாக வளர்ந்துவிட்டாள். சமீபத்தில் பத்திரிகைகளில் வெளியாகி இருந்த ஸரஸ்வதியின் புகைப் படத்தைப் பார்த்தே பரவசமாகி இருந்தேனே. நேரிலே பாயத்தால் புகைப்படம் மோசம் என்றுதான் சொல்ல வேண்டும். ‘மூக்கும், விழியும், அடக்கமும், மரியாதையுமாக என் ஸரஸ்வதி எப்படி இருக்கிறாள்! ‘அவள்’ இல்லையே இந்த ரத்தினத்தைக் கண்டு மகிழ்வதற்கு!’ என்று தகப்பனார் மகளைப் பார்த்துச் சந்தோஷமும், மனைவி இதைக்கண்டு அநுபவிப்பதற்கு இல்லையே என்று துக்கமும் எய்தினார். கண்களில் உணர்ச்சிப் பெருக்கால் துளிர்த்த நீரை அடக்குவதற்கு வெகு பிரயாசைப்பட்டார்.

அருகில் உட்கார்ந்திருந்த நண்பர் ஏறக்குறைய ஸரஸ்வதியின் தகப்பனார் வயதை உடையவர். அவர் பழகுகிற முறையிலிருந்து ஆப்த நண்பர் என்பது சொல்லாமலேயே விளங்கிவிட் டது. நட்பிலே பல தரங்கள் உண்டல்லவா? சிலர் தங்களுடைய வேலைகள் நடக்க வேண்டுமானால் மிகவும் நட்புரிமை பாராட்டுவார்கள். “உங்களைப்போல உண்டா?” என்பார்கள். அவர்கள் வேலை முடிந்து விட்டால் பிறகு, ” இருக்கிறாயா?” என்று கேட்பதற்குக்கூட அவர்களுக்கு வாய்வலித்துப்போகும்! சில நண்பர்கள் குழைந்து குழைந்து நண்பர்களிடம் வேலை வாங்கிக் கொள்வார்கள். தாங்கள் ஏதாவது செய்ய வேண்டுமானால் தூர விலகிவிடுவார்கள். ‘ரெயில் சிநேகம்’ என்று குறிப்பிடுகிறோம். ரெயிலில் சில மணி நேரங்கள் சந்தித்துப் பிரிகிறவர்களை அப்படிச் சொல்லுகிறோம். அருகிலேயே இருப்பார்கள் சில நண்பர்கள். அவர்களுடன் நாம் எவ்வளவு நட்புக்கொண்டு பழகினாலும் அவர்கள் விலகியே செல்வார்கள்.

பாரதத்திலே கர்ணனும், துரியோதனனும் பழகி வளர்த்த நட்பு மிகவும் சிறந்தது. உண்மையான நட்பு எந்த விதமான கட்டு திட்டங்களுக்கும் உட்பட்டதல்ல. பணக்காரன், ஏழை என்று வித்தியாசம் பாராட்ட அதில் இடம் இல்லை. இந்தக் காலத்திலே சிலர் தாங்கள் சிநேகம் பாராட்டுகிறவர்களின் சொத்து, அந்தஸ்து முதலியவைகளை ஆராய்ந்து பழகுகின்றனர். கண்ணனுக்கும், ஏழைக் குசேலருக்கும் அந்தஸ்தில் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசந்தான். இருந்தபோதிலும், அந்த தூய நட்பைப்பற்றிப் படிக்கும் போதெல்லாம் மனம் உருகிக் கண்ணீர் பெருகி விடுகிறது. இந்த மாதிரியே ஸரஸ்வதியின் தகப்பனாரும், அவருடன் கூடவந்த நண்பர் கோபால தாஸரும் அந்தஸ்தில் மிகுந்த வித்தியாசம் உடையவர்கள். பால்யத்தில் இருவரும் விஞ்ஞானக் கல்வி பயில ஒன்றாக மைசூர் ராஜ்யத்தில் வசித்தவர்கள். ஸரஸ்வதியின் தகப்பனார் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். பாஷை தெரியாத கன்னட ராஜ்யத்தில் கோபால தாஸர் அவருக்குச் சிறந்த நண்பராக விளங்கினார். கல்விப் பயிற்சிக்கு அப்புறம் ஸரஸ்வதியின் தகப்பனாருக்கு அதிருஷ்ட வசமாக உயர் பதவி கிட்டியது. கோபால தாஸருக்கும் கிட்டி இருக்கும். ஆனால், தேச சேவைக்காக காந்தி அண்ணலின் அன்புக்குரல் அவரை அழைத்தது. தியாக அக்னியில் ஸ்புடம் போட்ட தங்கத்தைப்போல் இருந்தார் அவர். ஆகவே, பதவியும், உயர்வாழ்வும் அவருக்குக் கிட்டவில்லை. அவரும் அதில் ஆசை கொள்ளாமல் தேசப்பணியிலேயே தம் வாழ்நாளைக் கழித்து விட்டார். இடை இடையே, நண்பர்கள் சந்திக்கும் போதெல்லாம், ஸரஸ்வதியின் தகப்பனார் தம் நண்பரிடம் அவரைப் பல உத்தியோகங்களை வகிக்கும்படி அழைத்தார். பிரும்மசாரியாகிய அவருக்கு, தாம் சம்பாதித்து யாரைக் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கவே நண்பரின். வேண்டுகோளை மறுத்துவிட்டார்.

அமைதி நிரம்பிய காவிரி நதிக்கரை ஓரமாகவே மோட்டார் சென்று கோபால தாஸரின் சிறு வீட்டை அடைந்தது. வீட்டிற்குப் பின்னால் ஓடும் நதியில் நொப்பும், நுரையுமாகப் புது வெள்ளம் செக்கச் செவேலென்று சுழித்துக்கொண்டு ஓடியது. காலைச் சூரியனின் தங்க நிறக் கிரணங்கள். சிவந்த தண்ணீரில் விழுந்து மேலும் அதைத் தங்கமய-மாக்கியது. நதியின் இரு மருங்கிலும் அடர்ந்த சோலைகள். வண்டுகள் ரீங்காரமிட்டன. பட்சிகள் இனிய குரலில் இசை பாடின. தொலைவில் திப்புவின் சமாதிக்கோவில் கம்பீரமாகக் காட்சி அளித்தது. நதிக்கரையை அடுத்த பழைய கோட்டை, கொத்தளங்கள் இடிந்து கிலமாகக் கிடந்தன. மனித வாழ்வின் க்ஷண கால இன்பத்தைப் பறை சாற்றும் சின்னங்கள் அவை.

ரெயில் பிரயாணத்தால் அலுத்துப்போய் ஸரஸ்வதி பகல் போஜனத்துக்கு அப்புறம் படுத்துத் தூங்கிவிட்டாள். அவள் விழித்து எழுந்தபோது மாலை ஆறு மணி இருக்கும். இப்படி தேகம் தெரியாமல் தூங்கியதை நினைத்து அவளே வெட்கிப் போனாள்.

“தூங்கி எழுந்தாயா அம்மா? வெளியே போய் இப்படி உலாவிவிட்டு வருவோமா?” என்று தகப்பனார் மகளை அழைத்தார்.

மூவரும் நதிக்கரை ஓரமாகவே மௌனமாக நடந்தனர். வெறுமனே ‘வள வள’ வென்று பேசுவதைவிட, அங்கு நிலவி யிருந்த அமைதியை ரஸிப்பதே பெரும்பொழுது போக்காக அவர்கள் கருதி இருக்க வேண்டும். ஸரஸ்வதியின் தகப்பனார் அன்று உற்சாகமாக இல்லை. ‘மகள் வளர்ந்து விட்டாள். தனக்கும் வயதாகிக்கொண்டு வருகிறது. அவளுடைய வருங் காலம் எப்படி?’ என்று அவர் மனம் ஓயாமல் அவரைக் கேட்டது. இதுவரையில் பேசாமல் இருந்த ஸரஸ்வதி, “அப்பா! இந்த நதிக்கரையும், அதோ தெரியும் ஸ்ரீரங்கநாதர் ஆலயமும், இந்த ஊரின் அமைதியுமாகச் சேர்ந்துதான் கோபால மாமாவை இப்படி எதிலும் பற்றில்லாமல் வாழச் செய்திருக்க வேண்டும். நான்கூட இங்கேயே தங்கிவிடலாம் என்று பார்க்கிறேன். இந்த ஊரிலேயே ஒரு சங்கீதப் பள்ளிக்கூடம் ஆரம்பித்து விட்டால் என்ன?” என்று ஆர்வத்துடன் தகப்பனாரை விசாரித்தாள்.

“நீ பேசுகிறது நன்றாக இருக்கிறதே குழந்தை! உன் அப்பாவுக்குத் தாம் தாத்தா ஆகவேண்டும் என்று ஆசை ஏற்பட்டிருக்கிறது. நீ விவாகமே வேண்டாமென்கிறாயாம். ஒரு பெண் தனியாக வாழ்க்கை நடத்துவது கடினம் என்பது உனக்குத் தெரியாத விஷயமில்லையே. ஸ்ரீரங்கப்பட்டணம் வந்து நீ சன்னியாசினியாவதற்கு நான் ஒருகாலும் உனக்கு உதவி புரியமாட்டேன் ஸரஸ்வதி! ஆமாம்….” என்று சிரித்துக் கோபால தாஸர் ஸேரஸ்வதியை உரிமையுடன் அதட்டினார்.

ஸரஸ்வதி சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்தாள். பிறகு, நண்பரைப் பார்த்துப் பணிவுடன், “இதென்ன மாமா, இப்படிப் பேசுகிறீர்கள்? எந்த விஷயத்திலும் ஆசை கொள்வதற்கு மனந்தானே காரணம்? என் மனம் என்னவோ கல்யாணத்தைத் தற்சமயம் விரும்பவில்லை. எங்கள் தமிழ் நாட்டில் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஸ்ரீவில்லி-புத்தூரில் பெரியாழ்வார் என்னும் மகானுக்குக் கோதை என்று ஒரு மகள் கிடைத்தாள். அத்தெய்வக் கன்னி சதாகாலமும் கண்ணனையே அகத்துள் இறுத்தி பக்தி செலுத்தினாள்; காதல் கொண்டாள்; அன்பு பூண்டாள். அகத்திலே அவனுக்கன்றி வேறு ஒருவருக்கு இடம் தர மறுத்தாள்; பெரியாழ்வார், மணப்பருவம் எய்தும் தம் மகளுக்குத் தகுந்த மணாளன் கிடைக்க வேண்டுமே என்று என் தகப்பனார் விரும்பியதைப் போலத்தான் விரும்பினார். ஆனால், அவள் உள்ளத்தை ஆட்கொண்ட மணிவண்ணன் அவளையும் ஆட்கொண்டு அருள் புரிந்தான். தம் மகளால் ஒரு படி உயர்ந்து விட்டார் தந்தை!” என்றாள்.

கோபால தாஸரின் கண்கள் அருவியாக மாறி இருக்க வேண்டும். காவிரியின் பிரவாகத்தைப்போல் அவர் கண்கள் கண்ணீரைக் கொட்டின. அவர் ஸரஸ்வதியின் வார்த்தை களுக்குப் பதில் கூறாமல் புரந்தரதாஸரின் அழகிய பாடலைப் பாட ஆரம்பித்தார்:

” பிருந்தாவனத்தில் ஆடுபவன் யார்?
சந்திர வதனனைப் பார்க்கலாம் வாடி-அடி தோழி!”

தொலைவில் கீழ்வானத்தில் சந்திரிகை முளைத்துவிட்டது. ’சிலு சிலு’ வென்று வீசும் மெல்லிய காற்றில் இந்த இசை வெகு தூரம் பரவி ஒலித்தது. ஸ்ரீரங்கப்பட்டண வாசிகள் இந்த இசை யைப் பல முறைகள் கேட்டு அகம் உருகி இருக்கிறார்கள். அன்றும் அப்படித்தான்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *