இருளும் ஒளியும்
சரோஜா ராமமூர்த்தி

36. கானல் நீர்

விசாலமான ஏரியில் காற்றினால் எழுப்பப்பட்ட சிற்றலைகள் நெளிந்து சுருண்டன. சுரீரென்று வான வீதியில் பவனி வரும் சூரியனின் பொன் கிரணங்கள் நீரில் தவழ்ந்து விளையாடின. நல்ல மழை காரணமாக ஏரி தளும்பி வழிந்தது. அதற்கடுத்த வயல்களில் நல்ல விளைச்சல், குழந்தையைக் காக்கும் தாயைப் போல, கிராமவாசிகள் பயிர்களைக் கண்ணின் கருமணிபோலக் காத்து வந்தார்கள். அவர்கள் வாழ்வும், தாழ்வும் அதில் தானே இருக்கிறது. ‘டைப்’ அடித்துப் பிழைப்பவர்களாக இருந்தால் ஓர் இடத்தில் வேலை போனால் இன்னொன்று என்று தேட இட மிருக்கிறது. தொழிலாளிகள் அவர்கள் கற்ற தொழிலைத்தான் போஷித்து வளர்க்கவேண்டி இருக்கிறது. அவர்களை வாழவைக்கும் மண்ணை நம்பிக் குடியானவர் வாழ்கிறார்கள். அதில் கிடைக்கும் பலாபலன்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

மணி மணியாய்க் கதிர்களில் நெல் மணிகள் அரும்பி இருந்தன. ஆயிற்று; கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. மார்கழியும் போனால் தைப் பொங்கலுக்கு முன்பே அறுவடை செய்துவிடுவார்கள். உழைப்பின் பலனை அனுபவித்து உள்ளம் நிறைவு பெறுவார்கள். வீட்டில் பெட்டி, படுக்கையைக் கூடத்தில் வைத்துவிட்டு ரகுபதி ஏரிக்கரைக்கு வந்து, உட்கார்ந்திருந்தான். தொலைவில் சாலையில் இரட்டை மாட்டு வண்டி ஒன்று ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது. பன்னிரண்டரை மணி பஸ் வந்து போய்விட்டது என்பதற்கு இந்தச் சவாரி வண்டிகள் தான் அத்தாட்சி. ஏனெனில், வெளியூரிலிருந்து வருபவர்கள் ரெயில் நிலையத்திலிருந்து கிராமத்துக்கு வருவதானால் மத்தியான்னம் இந்தப் பஸ்ஸிலாவது அல்லது மாலை ஐந்தரை மணி பஸ்ஸிலாவது தான் வரமுடியும். அப்படிப் பிரயாணிகளைக் கருணையுடன் சுமந்து வரும் பஸ் அவர்களை ஏரிக்கரையிலிருந்து ஒரு மைல் தொலைவிலேயே சாலையில் இறக்கிவிட்டுப் போய்விடும். கால்களில் தெம்புள்ளவர்கள் நடந்து கிராமத்தை அடைந்து விடுவார்கள். இல்லாவிடில் மாட்டு வண்டியில் வந்து சேர்வார்கள். சிறிது நேரம் வண்டியைக் கவனித்த ரகுபதி அசிரத்தையுடன் அங்கன வேறு பக்கம் ஓட்டினான். ‘யாரோ வருகிறார்கள்’ என்று அலட்சியமாக இருந்தான். அவன் அலட்சியத்தை முந்திக் கொண்டு தச்சரியம் கிளம்பியது.

‘என்ன? ஸரஸ்வதியா வருகிறாள்? இவளுக்கு என்ன ஜோஸ்யம் ஏதாவது தெரியுமா? சமயசஞ்சீவியாக இருக்கிறாளே’ என்று எண்ணி வியந்தான். அவன் நேருக்கு நேர் பார்க்கவும் அஞ்சினான். ஏதோ ஒருவித வெட்கம் அவனைச் சூழ்ந்துகொண் டது. குனிந்த தலையுடன் உட்கார்ந்திருந்த ரகுபதியின் முன்பு ஸரஸ்வதி வந்து நின்றாள்.

“அத்தான்! இந்த ஊரில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று நிதானமாக அவனைக் கேட்டாள் ஸரஸ்வதி.

ரகுபதி சங்கோஜத்துடன் தலையை நிமிர்ந்து பார்த்தான். குற்றவாளியைப்போல் மென்று விழுங்கினான். வார்த்தைகள் தடுமாற, “நீயா வந்திருக்கிறாய் ஸரஸு?” என்று அழைத்தான்.

“ஆமாம், அத்தான்! மைசூரிலிருந்து நேற்றுப் புறப்பட்டேன். உன் கடிதம் வந்தது! இனி தாமதிப்பதில் பிரயோஜனமில்லை என்று புறப்பட்டேன். ஒரு வாரத்துக்கு முன்பே வந்திருப்பேன். சில கச்சேரிகளுக்கு ஒப்புக்கொண்டதால் வர முடியாமல் போய்விட்டது. ஏரிக்கரையில் நீ உட்கார்ந்திருப்பதைப் பார்த்து இங்கேயே இறங்கிவிட்டேன்.”

”இன்று மாலை நானும் ஊருக்குப் புறப்படுவதாக இருக்கிறேன், ஸரஸு. நீயும் வருகிறாய் அல்லவா?” என்று கேட்டான் ரகுபதி.

“ரொம்ப அழகாக இருக்கிறதே. வராமல் எனக்கு இங்கே என்ன வேலை?” என்று கேட்ட ஸரஸ்வதி சற்றுத் தணிவாக, “அத்தான்! தீபாவளிக்கு நீ ஊருக்குப் போக வில்லையாமே. அத்தைக்கு எவ்வளவு ஏமாற்றமாக இருக்கும், அத்தான்? பாவம்……..”

“போகவில்லை ஸரஸு. பெண்களைத்தான் சஞ்சல புத்தியுள்ளவர்கள் என்று நம் பெரியவர்கள் வர்ணிக்கிறார்கள். ஆனால் உன்னிடம் நிரம்பியிருக்கும் மனோ உறுதி எனக்கு இல்லாமல் போய்விட்டது. பாதி வழியிலேயே நான் இங்கு வந்துவிட்டேன். நீயானால், மைசூர் பிரயாணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு திரும்பி வந்திருக்கிறாய்” என்றான்.

“இங்கே எதற்காக வந்தாய் யாருக்காக வந்தாய்? உன்னை நாடுபவளை நீ நாடிப் போகாமல் கானல் நீரை நம்பி வந்திருக்கிறாயா? தங்கத்தை என்ன என்று நினைத்துக் கொண்டு வந்தாய் அத்தான்? மலையிலிருந்து பள்ளத்தில் வழியும் அருவி பார்ப்பதற்கு ரம்மியமாகத்தான் இருக்கும். தொலைவில் நின்று அதன் அழகை நினைத்து வியக்கலாம். பார்த்து ரஸிக்கலாம். தவறிப் போய் அதில் காலை வைத்தோமானால் பரலோகம் போக வேண்டி யது தான். நீ மணமானவன். உன்னுடைய கடமையைப் புறக் கணித்துவிட்டுத் தங்கத்தைப் பார்க்க நீ வந்திருக்கக் கூடாது. அந்தப் பெண் பாவம் வெகுளி, அவளுக்கு என்ன தெரியும் அத்தான்?” என்று படபடவெனக் கூறினாள் ஸரஸ்வதி.

ரகுபதி செயலிழந்து நின்றுவிட்டான். ‘ஸரஸ்வதி சங்கீதத்தில் தான் தேர்ந்தவள். தர்ம சாஸ்திரத்திலும் தேர்ந்தவளா?’

‘படபடவென்று வார்த்தைகளைக் கொட்டி அத்தானைக் கோபித்துக்கொண்டோமே’ என்று ஸரஸ்வதி வருந்தினாள். பிறகு சமாதானம் அடைந்து, “ரொம்பவும் இளைத்துப்போய் விட்டாய் அத்தான். அத்தை பார்த்தால் உருகிப்போய் விடுவாள். வா, வீட்டிற்குப் போகலாம். தங்கத்தைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. வா!” என்று அன்புடன் அவனை அழைத்தாள்.

ரகுபதி பேசுவதற்கோ, தர்க்கிப்பதற்கோ ஒன்றும் இல்லை; மறுமொழி கூறாமல் ஸரஸ்வதியுடன் அவன் வீட்டை நோக்கி நடந்தான். அவர்கள் வீட்டை அடையும் போது மாலை மூன்று மணிக்கு மேலாகிவிட்டது. கொல்லைப் பக்கம் மாட்டுத் தொழுவத்திலிருந்து தங்கம் ஸரஸ்வதி வருவதைக் கவனித்துவிட்டாள். சந்தோஷத்தால் அவள் மனம் துள்ளியது: துள்ளி ஓடும் கன்றைப்போல, “ஸரஸு அக்கா!” என்று வாய் நிறைய அழைத்துக்கொண்டு முற்றத்துக்கு வந்து ஸரஸ்வதியை இறுகச் சேர்த்து அணைத்துக்கொண்டாள் தங்கம்.

“என்னைப் பார்ப்பதற்குத்தானே அக்கா இவ்வளவு தூரம் வந்திருக்கிறாய்? என்னிடம் உள்ள வாஞ்சையினால் தானே அக்கா – இங்கே வந்தாய்?” என்றெல்லாம் சந்தோஷம் தாங்காமல் கேட்டாள்.

“ஆமாம், அதற்காகத்தான் வந்தேன். தங்கம் நீ எப்படி இருக்கிறாய் என்று பார்ப்பதற்குத்தான் வந்தேன்” என்று ஸரஸ்வதி கூறி அவளைச் சேர்த்து அணைத்துக் கொண்டாள்.

ஸரஸ்வதியின் பேச்சுக் குரலைக் கேட்டு அலமு உள்ளிருந்து முற்றத்துக்கு வந்தாள். வந்தவள் திகைப்பும், பயமும் ஒருங்கே அடைந்தவளாக, “நீயா வந்திருக்கிறாய் ஸரஸு? உன் அத்தானைப் பார்த்தாயா? தீபாவளிக்கு ஊருக்குப் போகாமல் இங்கே வந்து உட்கார்ந்து விட்டான். என்ன சொன்னாலும் கேட்கவில்லையேடி. அம்மா; நான் என்ன பண்ணுவேன் சொல். மன்னிக்குத் தெரிந்தால் என்னைத்தான் குற்றம் சொல்லுவாள். நீ என்ன சொல்லுவாயோ என்று பயந்து செத்தேன் போ” என்று ஸரஸ்வதி எதையும் கேட்பதற்கு முன்பே படபடவென்று பேசினாள் அலமு.

‘அலமு அத்தைக்குப் பயமா? அதுவும் என்னிடம் ஏற்பட்ட பயமா?’ என்று ஸரஸ்வதி நினைத்துப் பார்த்துக்கொண்டாள்.

‘அவள் எல்லோரும் பயப்படும்படியாகவா இருக்கிறாள்? தர்மத்தைக் கண்டு அதர்மம் அஞ்சுகிறது. சத்தியம் அசத்தியத்தை வெல்லுகிறது. பொறுமை கோபத்தை விரட்டுகிறது. நன்மை தீமையை அழிக்கிறது. அவ்வளவு தான்! ஸரஸ்வதியைக் கண்டு யாரும் பயப்பட வேண்டியதில்லை. நற்குணங்களைப் போற்றும் அந்தப் பெண் சாதாரணமானவள்.’

ஸரஸ்வதி புன்சிரிப்புடன் அலமுவைப் பார்த்துச் சிரித்து விட்டு உள்ளே போய்விட்டாள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *