இருளும் ஒளியும்
சரோஜா ராமமூர்த்தி

14. சீதாவின் உபதேசம்

அன்று சனிக்கிழமையாதலால் ராஜமையர் காரியாலயத்திலிருந்து பகல் ஒரு மணிக்கே வீட்டிற்கு வந்துவிட்டார். காசிக்குத் தன் பெண் பாலத்துடன் சென்றிருந்த அவர் தாயாரும் ஊரிலிருந்து முதல் நாள் தான் வந்திருந்தாள். இடைவேளைச் சிற்றுண்டிக்கு அப்புறம் கூடத்தில் உட்கார்ந்து வடநாட்டைப்பற்றிப் பாட்டி கூறுவதைக் கேட்டுக்கொண்டு. இடை யிடையே அவளைக் கேலி செய்து கொண்டிருந்தார்கள்.

“பாட்டி! காசிக்குப் போனால் ஏதாவது அவரவர்களுக்குப் பிடித்த பண்டத்தை விட்டுவிடவேண்டும் என்று சொல்லுகிறார்களே. நீ காப்பியை விட்டுவிட்டாயா பாட்டி?” என்று சீதா சிரித்துக்கொண்டே கேட்டாள்.

”சே. . சே… காப்பியை இன்னும் ‘ ஸ்ட்ராங்’காகச் சாப் பிடுவது என்று சங்கல்பம் செய்து கொண்டு வந்திருப்பாள் பாட்டி!” என்று சந்துரு கேலி செய்தான்.

“போடா அரட்டை! கொய்யாப் பழத்தையும், பாகற் காயையும் விட்டுவிட்டேன்” என்று பேரன், பேத்திக்குப் பதில் கூறினாள் பாட்டி.

”அடி சக்கை! தினம் தினந்தான் கொய்யாப்பழமும், பாகற்காயும் நாம் சாப்பிடுகிறோம்? சரியாகத்தான் பார்த்துப் பொறுக்கி எடுத்திருக்கிறாய்?” என்றான் மீண்டும் சந்துரு.

“காயும், பழமும் விடவேண்டும் என்பது ஒன்றும் சாஸ்திரம் இல்லை. நமக்கு இருக்கும் பலவித ஆசைகளில் எதையாவது துளி அந்தப் புனித க்ஷேத்திரத்தில் விட்டுவர வேண்டும். ஆசா பாசங்களை ஒடுக்கவேண்டும் என்று பெரியவர்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள்” என்றார் ராஜமையர்.

சற்று ஒதுப்புறமாக உட்கார்ந்திருந்த மங்களம், “ஏதாவது அரட்டை வேண்டுமோ இல்லையோ? சாவித்திரியிடமிருந்து கடிதம் வந்து பத்து தினங்களுக்கு மேல் ஆகிறது. யாரும் ஒரு வரி பதிலே போடவில்லை. உன்னை எழுதச் சொல்லி எத்தனை முறைகள் சொல்லி இருப்பேன் சதா?” என்று மகன் கோபித்துக்கொண்டாள்.

“இதோ வந்துவிட்டேன் அம்மா” என்று கூறி காமரா அறைக்குள் சென்று கையில் கடிதமும் உரையும் அவள் எடுத்து வந்தபோது தெருவில் வண்டி வந்து நின்றது. கையில் ஒரு சிறு பெட்டியை எடுத்துக்கொண்டு சாவித்தி மட்டும் இறங்கி உள்ளே வந்தாள். அடுத்தாற்போல் மாப்பிள்ளை ரகுபதி வருவான் என்று எல்லோரும் வாசற்பக்கத்தையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வண்டிக்காரன் காலி வண்டியைத் திருப்பிக்கொண்டு போன பிறகுதான் சாவித்திரி மட்டும் தனியாக வந்திருக்கிறாள் என்பது தெரிந்தது.

“என்னம்மா இது? நீ மாத்திரம் தனியாகவா வருகிறாய்?” என்று ஆச்சரியத்துடன் மகளைப் பார்த்துக் கேட்டார் ராஜமையர்.

“இது என்னடி அதிசயம். ஒரு கடுதாசி போட்டிருந்தால் இங்கேயிருந்து யாராவது வந்து அழைத்து வந்திருக்க மாட்டோமா?” என்று பாட்டி அதிசயம் தாங்காமல் கேட்டுவிட்டுப் பேத்தியைப் பார்த்தாள்.

சாவித்திரி பதில் எதுவும் கூறாமல் காமரா அறைக்குள் சென்று பெட்டியை வைத்துவிட்டு அவளைத் தொடர்ந்து அறைக்குள் நுழைந்த மங்களத்தின் தோளில் தலையைச் சாய்த்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள். அப்புறம் மாமியார் வீட்டில் தனக்கு ஏற்பட்ட கஷ்டங்களைச் சாவித்திரி தாயிடம் கூறவும், அது வீடு முழுவதும் பரவுவதற்குச் சில நிமிஷங்கள் கூடப் பிடிக்கவில்லை.

”அடிக்கிறதாவது? ஹூம். . பதினெட்டு வயசு வரையில் வளர்த்துக் கொடுத்தால் அடிக்கிறதாவது? ஹும் . .” என்று ராஜமையர் திருப்பித் திருப்பித் தாம் சொன்ன வார்த்தைகளையே சொல்லிக்கொண்டிருந்தார்.

“அடிப்பார்கள். நாளைக்கு இவளை வேண்டாம் என்று தள்ளியும் வைப்பார்கள். வீட்டிலேதான் பெண் குதிர் மாதிரி வளர்கிறதே!” என்று பாட்டி, சம்பந்தம் இல்லாமல் பேச ஆரம்பித்தபோது சந்துரு , திடுக்கிட்டான். ’ஸரஸ்வதியைக் குறித்தா இவ்வளவு கேவலமாகப் பேசுகிறாள் பாட்டி? ரகுபதி ஒரு கல்யாணம் பண்ணிக்கொண்டு, அந்த மனைவியைத் தள்ளி வைத்த பிறகு தன்னை மணக்கவேண்டும் என்று விரும்புகிற பெண்ணா அவள்?’ – பாட்டியின் சொல்லைப் பொறுக்கமுடியாமல் சந்துரு சற்று இரைந்து. “சரி, சரி, எல்லாவற்றையும் கொஞ்சம் பொறுமையாக ஆராய்ந்து விசாரிக்கலாம். வாய்க்கு வந்ததைப் பேசிக்கொண்டு நிற்கவேண்டாம்” என்று கூறினான்.

சாப்பிடும் கூடத்தில் சாவித்திரியின் பக்கத்தில் சீதா வந்து உட்கார்ந்து, “உனக்கும், அத்திம்பேருக்கும் ஏதோ ஊடல் போல இருக்கிறது! தமிழ்க் கவிதைகளையும், தலைவன், தலைவி ஊடல் பாடல்களையும் படித்துவிட்டு அத்திம்பேர் உன்னிடம் ஊடலை ஆரம்பித்திருக்கிறார் போல இருக்கிறது! நடுவில் யாராவது தூது செல்வதற்கு இருந்திருந்தால் நீ இங்கே வந்திருக்கமாட்டாய் இல்லையா சாவித்திரி? அப்படித்தானே?” என்று குறும்பு தவழக் கேட்டாள்.

“நாளைக்கு உனக்கு வரப்போகிற புருஷன் உன்னைக் கன்னத்தில் நாலறை அறைந்து வீட்டைவிட்டு வெளியே தள்ளினால், நீ அதை ’வேடிக்கை’ன்னு நினைத்துக்கொண்டு அழகாகக் குடித்தனம் செய்து கொண்டு இருப்பாய்” என்று பாட்டி உரக்க இரைய ஆரம்பித்தாள், தன் சின்னப் பேத்தியைப் பார்த்து.

சீதாவுக்கு உண்மையிலேயே தன் தமக்கைமீது கோபம் ஏற்பட்டது.

”கணவன் அடிக்கிறான் என்றே வைத்துக்கொள்வோம். வீட்டைவிட்டுத் துரத்துகிறான் என்றே வைத்துக்கொள்வோம். வீடு என்பது கணவன், மனைவி இருவருக்கும் சொந்தமான இடம். இதிலிருந்து ஒருவரையொருவர் வெளியே போகச்சொல்ல யாருக்கு அதிகாரம்? அப்படியே அவன் வற்புறுத்தினாலும், ‘சீ, சீ, உங்களையே கதி என்று நம்பி வந்திருக்கும் என்னை, என் வீட்டைவிட்டு வெளியேற்ற உங்களுக்கு வெட்கமில்லையா? அவமானமாக இல்லையா? பேசாமல் இருங்கள். என் வீட்டுக்கு நான் தான் அரசி’ என்று கூறிவிட்டு நான் உள்ளே போய் விடுவேன். காலப் போக்கில் எவ்வளவோ மனஸ்தாபங்கள் கரைந்து போய்விடுகின்றன. இதைத்தானே அன்னை கஸ்தூரிபாயும் நமக்குப் போதிக்கிறார்?” என்று சீதா ஆவேசத்துடன் பேசினாள். அவள் அப்பொழுது சந்துரு லைப்ரரியிலிருந்து வாங்கிவந்த காந்திஜியின் ‘சத்திய சோதனை’யைப் படித்துக் கொண்டிருந்தாள்.

“சீதா! நீ பேசாமல் இருக்கமாட்டாயா? உன்னை அதிகம் படிக்கவைப்பதே ஆபத்தாக முடியும் போல் ! இருக்கிறதே!” என்று ராஜமையர் அதட்டிய பிறகுதான் அப்பாவும் விஷயத்தைப் பிரமாதப்படுத்த விரும்புகிறார் என்பதைச் சீதா தெரிந்து கொண்டாள்.

சாவித்திரியின் கல்யாணத்துக்காக ராஜமையர் -ஆறாயிரம் ரூபாய்க்குமேல் செலவு செய்திருக்கிறார். விமரிசையாகக் கல்யாணம் செய்தார். மாப்பிள்ளை ரொம்பவும் நல்ல பிள்ளை என்று முடிவு கட்டியிருந்தார். பிக்கல், பிடுங்கல் ஒன்றும் இல்லை. பெண் சுதந்தரமாக வாழ்வாள் என்றும் எதிர்பார்த்தார். ஆனால், கல்யாணம் நடந்த நான்கு மாதங்களுக்குள் கணவனுடன் மனஸ்தாபப்பட்டுக்கொண்டு தன்னந்தனியே வந்து நிற்கும் மகளைப் பார்த்ததும், பொறுமைசாலியான அவர் மனமும் கோபத்தால் வெகுண்டது: எரியும் நெருப்புக்கு விசிறி கொண்டு விசிறுவது போல அவர் தாயார் மேலும் தொடர்ந்து. “ஏண்டா அப்பா! குழந்தையை அடித்துத் துரத்தும்படி என்னடா கோபம் வந்துவிட்டது அவர்களுக்கு? சீர்வரிசைகளில் ஏதாவது – குறைந்து போய்விட்டதா? சாவித்திரிதான் என்ன அழகிலே குறைவா? எதறகாக இந்தமாதிரி பண்ணியிருக்கிறார்கள்?” என்று கேள்விமேல் கேள்வியாகக் கேட்டு அவரைத் திணற அடித்தாள்.

“பணம் காசைப்பற்றி என் மாமியார் வீட்டாருக்கு ஒருவிதக் குறையுமில்லை பாட்டி. அவர் இஷ்டப்படி நான் வீணை கற்றுக்கொள்ள வேண்டுமாம்! சங்கீதம் தெரிந்தவளாக இருந்தால்தான் அவர் மனசுக்குப் பிடித்தமாக இருக்குமாம்!” என்று பாட்டியின் கேள்விகளுக்குப் பதில் அளித்தாள் சாவித்திரி.

“அப்பா! இவ்வளவுதானா? பேஷாகக் கற்றுக்கொள்கிறது. இதிலே சண்டைக்கும், சச்சரவுக்கும் இடமில்லையே. அப்படி உனக்குச் சங்கீதம் பயின்றும் வராமல் போனால் அத்திம்பேர் தன்னால் மனம் சலித்து விட்டுவிடுகிறார்” என்றாள் சீதா.

“அடேயப்பா! இதுதானா விஷயம்?” என்று மங்களம் ஒரு பெருமூச்சு விட்டாள். இதுவரையில் இவர்கள் பேச்சைக் கவனித்த சந்துரு உதட்டை மடித்துக் கொண்டே
சீதாவைப் பார்த்தான்.

”ஒருவேளை நாளைக் காலை வண்டியில் அத்திம்பேர் சாவித்திரியைத் தேடிக்கொண்டு வந்தாலும் வருவார்” என்று சீதா கூறியதும், “வரட்டுமே. தயாராக ஆரத்தி கரைத்து வை! வந்ததும் திருஷ்டி கழித்து ஆரத்தி சுற்றி நெற்றிக்குத் திலக மிட்டு உள்ளே அழைத்து வாயேண்டி. அசடே. . . .” என்று கூறிப் பல்லை நறநறவென்று கடித்தாள் சாவித்திரி.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *