
அருட்பெருமான்
சுத்தானந்த பாரதியார்
12. அருட்பிரகாசம்
நான்காவது திருமுறையில், தாம் எய்திய திருவருட் பேற்றை அருட்பெருமான் விளக்குகிறார்: அருட்பிரகாச மாலை அநுபூதிமாலையே பொது நடத்தரசே. சுத்தஜோதி சித்த சிகாமணியே, அன்றொரு நாள் இரவில் வந்து என் இதயக் கதவைத் திறந்து நின்விபூதியைத் தந்தாய், கருணை துளும்ப என்னை நோக்கினை, ‘மகனே அஞ்சாதே,வருந்தாதே; நீ என் தொழும்பன் நீ மரணமற்று வாழ்க! இதைப் பெற்றுக்கொள்’ என்று திருவருளமுதந் தந்தனை. தேமாங் கனியும் தேனும் பாலுங் கலந்ததுபோல மொழியருளினை, என்னுருவம் எனக்குக் காட்டி நின்னுருவை விளக்கி, வேதாந்த சித்தாந்த ஒருமை காட்டித் தற்போதந் தோன்றாத அருட்போத வொளி துலக்கினை, நானற்ற தனியிடம் தானென நிறைந்தாய். என்னறிவையுண்டு என்னுடன் கூடி, என்னின்பம் எனக்கருளித் தானாகுந்தன்னறிவாக விளங்கினை. உள்ளத்தில் அருள் விளக்கி அதுவானாய். என்னைக் கொடுத்தேன்; உன்னைக் கொடுத்தாய் என்னுயிரும் உடலும் தந்தேன்; உன்னுயிரும் உடலும் தந்தாய்; என்னைப் புணர்ந்து மெய்யறிவின்பமளித்த அருட்சோதி நாயகனே போற்றி!!
இதுவே வேதமும் கீதையும், மூலமந்திரமும்,சிவஞான போதமும் சொல்லும் சுத்த யோகசித்தி இதுவே: அருட்பெருமான் அடைந்த திருவருட் பிரகாசம்.



