
அருட்பெருமான்
சுத்தானந்த பாரதியார்
6. அண்ணியின் கண்ணீர்
தந்தையார் திவசம் சிறப்பாக நடந்தது; உற்றார் உறவினர் விருந்துண்டனர். “தம்பி உடனுண்பதற்கில்லையே” என்று அண்ணல் குறைப்பட்டார். அவர் உண்ட மயக்கத்தில் கண்ணயர்ந்தார்; அப்போது புறவழியே மெல்லப் புகுந்தான் இராமலிங்கம். “வாடா கண்ணே” அண்ணியார் ஆவலாக வரவேற்று இலைபோட்டுச் சோறிட் டாள். எல்லாரும் உண்ட மிச்சம் பதனழிந்திருந்தது. அதையும் பசிக்கு வாரியடைத்தான் ஞானி: அண்ணி கண்ணீர் விட்டு விம்மினாள்: “அண்ணியம்மா அலமற லேன்?” என்று மீண்டும் மீண்டும் பிள்ளை கேட்டான். அண்ணி கண்ணைத் துடைத்துக் கொண்டு கருணை ததும்ப “தம்பி,எத்தனை நாள் இப்படிக் காணாது வந்து சாப்பிடுவாய்; அண்ணார் சொன்னபடி படித்தால் அவர் மகிழ்வாரே. பிறகு எங்களுடனிருந் துண்ணலாமே. தம்பி எனக்காகவாவது நீ படிக்க வேண்டும்” என்று மன்றாடினாள். “அப்படியே படிக்கிறேன்; அண்ணியம்மா. மாடியில் எனக்கொரு தனியறை அலகிட்டுத் தாரும்” என்றான் ஞானி. அண்ணி மகிழ்ச்சியுடனே தந்தாள். ஆனால் உள்ளே இராமலிங்கம் ஒரு கண்ணாடி வைத்து அதன்முன் விளக்கு வைத்து கண்ணாடிப் பார்த்து உள்ளத் தானாகிய குகமுருகனை உபாசித்தான்.



