
அருட்பெருமான்
சுத்தானந்த பாரதியார்
16. நம் பிள்ளை
வருகிறார் சென்னை மாகாணக் கல்லூரிப் புலவர் – இதோ பழம் பாட்டு என்று காட்டுகிறார்-நடை கரபுறா கரடு முரடா யிருக்கிறது, பார்க்கிறார் வள்ளலார்; ஆளை ஊடுருவிப் பார்க்கிறார். “பழம் புலவர் வாக்கில் இவ்வளவு நெருடும் பிழையும் இராவே; இது பொருளிலக்கண மறியாத கற்றுக் குட்டிகள் வேலை” என்கிறார். புலவர் அகச் செருக்கு முகத்தில் அசடு வழிகிறது. வித்தகப் புலவரைப் புத்தகப் புலவன் பணிகிறான். நுண்ணிறிவை நூலறிவு வணங்குகிறது
“ஓதா துணர்ந்த ஒண்மணிப் புலவ-இவை யான் புனைந்த பாடல்களே; பிழை பொறுத்தருளுக; நான் தங்கள் அன்பன், அடியேன்” என்று வணங்கினார் புலவர் வேலாயுதம். அருட் புலவர் “நீ நமக்குப் புதியவனல்லை மிகப் பழையவனே. நம் பிள்ளை நமக்கே கிடைத்தனை” என்று ஏற்று திருக்கண் நோக்கி “குஹாய நம:” என்ற குமரவேள் மந்திரத்தை உபதேசித்தருளினார். முதல் இறுதி வரையில் வேலாயுதப் புலவர் அருட் பெருமானிடம் அன்பு கொண்டு அருட்பா வெளியிடும் பணியிலும் ஈடுபட்டார். திருமுறைகளுக்கு நம்பியாண்டார் போல் அருட்பாவுக்கு வேலாயுதனார் உதவினார். வீராசாமி, பொன்னேரி சுந்தரனார், ஸ்ரீநிவாச வரதர், ஞானசுந்தரர், பண்டார ஆறுமுகம் முதலிய பலரும் அருளன்பராகி எம் பெருமானுக்குத் தொண்டு செய்தனர். வள்ளற்பெருமான், அன்பர் உள்ளம் அருள் வழி நிற்கச்செய்தார்; பொருள், வழியன்று, அவர் பாமாலைகளும் அருளாண்டவனுக்கே உரிமையாக்கப் பெற்றன. கந்தசாமி “என் வறுமை நீங்கச் செல்வருக்குச் சீட்டுக் கொடு” என்கிறார். கேட்டால் என்னுடையானையே கேட்பேன்; என்னை வெட்டிப் போட்டாலும் பிறரைக் கேளேன்” என்றார் அருட் செல்வர். உறவினர் சுந்தரனார் “என் வறுமை தீரப் பாடும்” என்கிறார். “ஐய இளையேல்! போ சிற்சபை; நானும் வருவேன்; இருவர் குறையும் தில்லையப்பன் முன் சொல்லிக் கொள்வோம்”என்கிறார்
சிதம்பரக் காதலர் சுந்தரனார் தாம் பாடம் சொல் லும் மாணவரை அடிப்பதுண்டு; அதை இரக்கமுடன் தடுத்து அருட்பெருமான் உரைத்த பாட்டின கருத்தாவது: படிப்பது நன்று; படித்த பயனாக மன்றுள்ளாடும் பரமன் அன்பே தடிப்பது நன்று; வீணில் நெஞ்சு துடிக்கக் கூடாது, இதெல்லாம் நீ அறிவாய், நீ அறவுரை சொல்லும் விரதன்; இந்த அடிப்பதுமச் சிறுவர்களை அடிப்பது நன்றாயில்லை. என் மேல் ஆணை இனி அடிக்காதே- இந்த வேண்டுகோளிலும் நடராஜப்பெருமான் அன்பை இணைத்திருக்கிறார் அருட் பிரகாசர். வள்ளலார் எப்படி வாழ்ந்தார்?



