
அருட்பெருமான்
சுத்தானந்த பாரதியார்
14. உரைநடை
அருட்பெருமான் மனுமுறை கண்ட வாசகம் எழுதினார், அஃது அனபாய சோழன் பசுவுக்கும் நீதி வழங்கிய பெரிய புராணக் கதைதான். ஆனால் ஐயா நடையும், அருட் சுவையும் அப்பழங் கதைக்குப் புதுச் சுவையளித்தன. வீதி விடங்கன் தனது தேர்க்காலிற் பட்டிறந்த கன்றைப் பார்த்துப் புலம்புகிறான்:
‘நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ? மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ, குடிவரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ,ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ, களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ, வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ, பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ கோள் சொல்லிக் குடும்பம் கலைத்தேனோ, கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ. அன்புடையார்க்குத் துன்பம் செய்தேனோ, தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ, சுத்த ஞானிகளைத் தூஷணை செய்தேனோ, தெய்வம் இகழ்ந்து செருக்கடைந்தேனோ’ இவ்வாறு ஐயா உரைநடையும் உரைச் செய்யுளாக நயம்பட அமைந்தது.



