
தீட்சிதர் கதைகள் – பம்மல் சம்பந்த முதலியார்
பத்தாவது கதை
நமது தீட்சிதர் ஒரு சமயம் சென்ன பட்டிணத்திற்கு வந்திருந்தார். ஒரு நாள் அவர் சமுத்திரக்கரைக்குக் காற்றுக்காகப் போயிருந்தார். சாயங்காலம் இருட்டியவுடன் அங்கிருந்து மயிலாப்பூருக குத் தன் ஜாகைக்குப்போகப் புறப்பட்டு ஒரு டிராம் வண்டியில் ஏறினார். அச்சமயம் டிராம் வண்டியிலிருந்த ஒரு மனிதர் டிராம் டிக்கட்காரருடன் அவர் சில்லரைக்காகக் கொடுத்த ஒரு இரண்டணா விற்காகச் சண்டை போட்டுக்கொண்டிருந்தார். டிராம் டிக்கட்காரர் அந்த இரண்டணா தான் கொடுத்ததல்ல என்று பிடிவாதம் பிடித்தார். இவர் அவர் கொடுத்ததுதான் என்று கூறிக்கொண்டிருந்தார்.
பக்கத்திலிருந்தவர்கள், டிராம் டிக்கட்காரர் சொடுத்ததுதான் என்று சொன்னார்கள். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நமது தீட்சிதர், அவர்களது சண்டையை நிறுத்தி, தன்னிடமிருந்த இரண்டணாவை அவரிடம் கொடுத்துவிட்டு, செல்லாத இரண்டணாவைத் தான் வாங்கிக்கொண்டார். டிக்கட் விற்பவன் இவரிடம் வந்து டிக்கட் வாங்கும் படிக் கேட்க, “இந்த இரண்டணாதான் என்னிடமிருக்கிறது. இதற்கு டிக்கட் கொடுத்தால் கொடு; இல்லா விட்டால் நான் இறங்கிவிடுகிறேன்” என்றார். அதன்பேரில் அவன் அதற்குக் கொடுக்கமுடியாதென்று ஆட்சேபிக்க, ஆனால் வண்டியை நிறுத்து,நான் இறங்கிவிடுகிறேன் என்று சொல்லி, டிராமிலிருந்து குத்துவிட்டார்.
அந்த டிராம் போனவுடன், மற்றொரு டிராம் வர, அதில் ஏறிக்கொண்டார். அந்த வண்டியில் டிக்கட் விற்பவன் இவரிடமிருந்து அதே இரண்டணாவைக் கவனித்துப் பாராமல் வாங்கிக் கொண்டு டிக்கட் கொடுத்துவிட்டான். நமது தீட்சிதர் இப்படித்தான் இவர்களுக்குப் புத்திவரச் செய்யவேண்டும், என்று எண்ணிக்கொண்டு மயிலாப்பூர் போய்ச் சேர்ந்தார்.



