
தீட்சிதர் கதைகள் – பம்மல் சம்பந்த முதலியார்
பதினாறாவது கதை
நமது தீட்சிதர் அக்கம் பக்கத்திலுள்ள கிராமங்களுக்கு அடிக்கடி போய் வரவேண்டியிருந்தபடியால், ஒரு மாட்டு வண்டியை வைத்திருந்தார். ஒரு முறை அந்த மாட்டை ஓட்டும் வண்டி என், விருதாவாக அம்மாட்டைத் தார்க்கழியால் குத்தினான் என்று அவன்மீது கோபித்தார். அந்தப் பையன், அதற்காகக் கோபித் துக்கொண்டு வேலையை விட்டு விலகிவிட்டான். சில வருஷங்கள் சென்ற பிறகு ஒருநாள் ஸ்வாமி மலையில் ஒரு சிநேகிதர் வீட்டுக் கலியாணத்தில் கச்சேரிக்கு நமது தீட்சிதர் போயிருந்தார்.
அச்சமயம், இதற்கிடையில் மாடு ஒட்டுந்தொழிலை விட்டு விட்டு, மிருதங்கம் வாசிக்கக் கற்றுக்கொண்ட அந்தப் பையன் தன் தமையன் புல்லாங் குழல் வாசிக்க, தான் பக்க வாத்தியமாக மிருதங்கம் வாசித்துக்கொண்டிருந்தான்.
அவன் இவரைக் கண்டு, கர்வங்கொண்டவனாய்த் திரும்பியும் பாராது வாசித்துக் கொண்டிருந்தான். கச்சேரி முடிந்தவுடன் கலியாண வீட்டுக்காரர் அவ்விருவர்களுக்கும் செய்ய வேண்டிய சன்மானத்தை நமது தீட்சிதர் கையில் கொடுத்து அவர்களுக்குக் கொடுக்கச் சொல்ல, தீட்சிதர் அவர்களுக்கு அச்சன்மானத்தைக் கொடுக்கும் பொழுது, அவ்விருவருள் தமயனைப் பார்த்து “பலே! நன்றாக ஊதியிருக்கிறாய்!” என்று சொல்லிக் கொடுத்தார். (வாஸ்தவத்தில் அவன் கொஞ்சம் ஸ்தூல சரீரமுடையவன்!) பிறகு மற்றவனைப் பார்த்து, “மாடு உயிரோடிருக்கும் பொழுது அதன் தோல் உரிய அடித்தாய், இருந்த பிறகும் அதன் தோலை நன்றாய் நகத்தித்தள்ளி விடுகிறாயே!” என்று அவன் பூர்வோத்திரத்தைக் குறிப்பிட்டுச் சொன்னார்.
உடனே அவன் தீட்சிதருக்கு நமஸ்காரங் செய்து, “நான் ஏதாவது தப்பு செய்திருந்தால் மன்னிக்க வேண்டும்!” என்று குறிப்பாய் வேண்டினான். பிறகு தீட்சிதர் சரிதான் என்று அவனை மன்னித்துவிட்டார்.



