
நாயகப் பெருமான்
நாரா. நாச்சியப்பன்
19. உள்ளத்தின் உள்ளே உள்ளான்
மதீனாவிலிருந்து இருநூறு கல் தொலைவில் கைபர் நாடு இருந்தது. அங்கிருந்த யூதர்கள் இஸ்லாத்திற்குப் பகையாய் மாறினார்கள், அவர்களை அடக்குவதற்காக முஸ்லிம் சேனை திரண்டெழுந்தது. இருநூறு குதிரைப் படை வீரரும் ஆயிரத்து நானூறு காலாட் படை வீரரும் அடங்கிய அந்தப் பெரும்படை போகும் வழியெல்லாம் படை நடைப் பாட்டுப் பாடிக் கொண்டு சென்றது. இடையிடையே, “அல்லாஹு அக்பர் (அல்லா மிகப் பெரியவன்) என்னும் பெருமுழக்கத்தை எழுப்பிச் சென்றனர் இஸ்லாமிய வீரர்கள்.
ஒரு மைதானத்தின் வழியாகப் போகும் போது வீரர்கள் மிக உச்சமான குரலில் “அல்லாஹுஅக்பர்” என்று முழங்கினார்கள்.
பெருமானவர்கள் அவ் வீரர்களை நோக்கிக் கூறினார். “மெதுவாகவே சொல்லுங்கள். ஏனெனில் நீங்கள் அழைக்கும் இறைவன் வெகு தொலைவில் உள்ளவனோ அல்லது காது கேளாதவனோ அல்ல. உங்களால் அழைக்கப்படும் அவன் உங்கள் அருகிலேயே இருக்கிறான்; உங்களிடமே இருக்கிறான்.”
பெருமான் அவர்களின் உண்மை விளக்கத்தை அறிந்த பின் முஸ்லிம் வீரர்கள் தங்கள் முழக்கத்தை மெதுவாகச் சொல்லிக் கொண்டு போனார்கள்.



