
நாயகப் பெருமான்
நாரா. நாச்சியப்பன்
5. வாழ்க்கைத் துணையாய் வாய்த்த பிராட்டியார்
பெருமானவர்களுக்கு அப்போது இருபத்தைந்து வயது நடந்து கொண்டிருந்தது. கல்வி கற்கவில்லையே தவிர, அவர்களிடம் சிறந்த அறிவு நிரம்பியிருந்தது. வாணிபத்திலும் நாட்டுப் பணியிலும் அவர்கள் சிறந்து விளங்கினார்கள்.
அக்காலத்தில் மக்காலிப் குறைஷி வம்சத்தில் செல்வம் நிறைந்த ஓரு சீமாட்டி இருந்தார்கள். அவர் கள் பெயர் கதீஜா என்பதாகும். அப்பெருமாட்டியார் இருமுறை மணம் புரிந்து கொண்டும் விதவையாக இருந்தார்கள். எனவே, அவர்களுடைய வாணிபத்தைக் கவனிக்க நம்பிக்கையான மேலாள் ஓருவர் வேண்டியிருந்தது. பெரிய மனிதர் பலரை விசாரித்ததில், பெருமானவர்களைப் பற்றி நன்கு அறிந்து அவர்களைத் தம் வாணிபப் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார்கள். பெருமானர்களும் தம் சிறிய தந்தையார் அபூத்தாலிப்பின் ஆலோசனையைக் கேட்டு, அவர்கள் அனுமதியின் பேரில் கதீஜாப் பெருமாட்டியிடம் வேலைக்குச் சேர்ந்தார்கள்.
கதீஜாப் பெருமாட்டியவர்கள்,பெருமானுடைய குணச்சிறப்புக்களை நன்கறிந்து அவர்களையே தம் கணவராகப் பெற விரும்பினார்கள். அப்போது பெருமாட்டிக்கு வயது நாற்பது.
பெருமாட்டியின் கருத்தையறிந்த பெருமானவர்கள் அபூதாலிப் அவர்களிடம் கூறிக் கலந்து திருமணம் செய்துகொள்ள இணங்கினார்கள்.
வயது வேற்றுமை அதிகமாக இருந்தாலும் அவர்களின் இல்லறவாழ்க்கை சிறப்பாக நடந்தது. இருவரும் ஒருவரையொருவர் நன்கறிந்து ஒன்றிப்பழகினார்கள்
கதீஜாப் பெருமாட்டியவர்கள் நபிகள் நாயகத்திற்குத் தம் ஆயுள் உள்ளவரை உறுதுணையாயிருந்தார்.



