
சின்னஞ் சிறு வயதில் அழ.வள்ளியப்பா
20. பிறந்த நாள்
அந்தப் பையனுடைய அப்பா ஒரு பெரிய வக்கீல். நல்ல பணக்காரர். மிகுந்த செல்வாக்கு உடையவர். அவரும் அவருடைய மனைவியும் பிள்ளையை மிகவும் செல்வமாக வளர்த்து வந்தார்கள்.
தீபாவளி, கோகுலாஷ்டமி, தசரா — இப்படிப்பட்ட பண்டிகைகள் வந்துவிட்டால், அந்தப் பையனுக்குத் தலை கால் தெரியாது. ஆடிப் பாடி மகிழ்வான்.ஆனாலும் அவற்றையெல்லாம் விட மிகவும் பிரியமான நாள் ஒன்று அவனுக்கு உண்டு. அதுதான் அவனுடைய பிறந்த நாள்!
பிறந்த நாளன்று அவன் சரிகை வேட்டி கட்டிக் கொள்வான். பட்டுச் சொக்காய் போட்டுக்கொள்வான். அன்று அவனுடைய வீட்டுக்குப் பெரிய பெரிய மனிதர்கள் எல்லாரும் வருவார்கள். அவர்கள் வரும்போது வெறும் கையுடனா வருவார்கள்? நல்ல நல்ல பரிசுகளெல்லாம் கொண்டு வருவார்கள். அவற்றை அவனிடம் கொடுத்து அவனுடைய ஆனந்தத்தை அதிகப்படுத்துவார்கள். அவன், ‘இந்த விழாவில் நான்தான் கதாநாயகன்’ என்று எண்ணி எண்ணிப் பெருமைப்படுவான்.
அடடே, முக்கியமாக நடக்கும் ஒன்றைக் கூற மறந்து விட்டேனே! அன்று அதிகாலையில் ஒரு பெரிய தராசில், ஒரு தட்டில் அந்தப் பையனை உட்கார வைப்பார்கள்; மற்றொரு தட்டில் கோதுமை முதலிய தானியங்களை வைப்பார்கள். தானியங்களின் எடை அவனுடைய எடைக்குச் சரியாக வரும்வரை வைத்துக் கொண்டே யிருப்பார்கள். பிறகு, தராசில் வைத்த தானியங்களை எடுத்து ஏழை, எளியவர் களுக்குக் கொடுப்பார்கள்.
அன்று முழுவதும் ஒரே கோலாகலமாக இருக்கும். பெரிய விருந்தும் நடக்கும். இப்படியெல்லாம் குதூகலமாக இருக்கும்போது திடீரென்று அந்தப் பையனுக்கு ஒரு வருத்தம் வந்துவிடும். அது என்ன வருத்தம்?
இந்தப் பிறந்த நாள் ஆண்டுக்கு ஒரு முறைதானே வருகிறது? அடிக்கடி வரவில்லையே!’ என்று எண்ணி வருந்துவாகும்.
அந்துப் பையன் நினைத்ததுபோலவே அவனுடைய பிறந்த நாள் அடிக்கடி வருவதாயிருந்தால், ‘குழந்தைகள் தினமும் நம் நாட்டில் அடிக்கடி கொண்டாடப்படும் அல்லவா?’
‘குழந்தைகள் தினத்திற்கும் அந்தப் பையன் பிறந்த நாளுக்கும் என்ன சம்பந்தம்?” என்றுதானே கேட்கிறீர்கள்? கேளுங்கள்; நன்றாய்க் கேளுங்கள்.
நவம்பர் பதினான்காம் தேதியை நாடெங்கும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடி வருகிறார்கள் அல்லவா? இதற்குக் காரணம் என்ன? ‘என் பிறந்த நாளைக் குழந்தைகள் தினமாகக் கொண்டாடுங்கள். அப்படிக் கொண் டாட வேண்டுமென்பதுதான் என் ஆசை’ என்று உலகம் போற்றும் ஒருவர் கூறினாரே, அவர் யார் என்று தெரிகிறதா? அவரைத் தெரிந்து கொண்டால், “பிறந்த நாள் அடிக்கடி வராதா!” என்று கவலைப்பட்ட அந்தச் சிறுவனும் யார் என்பது தெரிந்துவிடும். என்ன, தெரிந்து கொண்டு விட்டீர்களா?
உலகம் போற்றும் தலைவர், மனிதருள் மாணிக்கமாக விளங்கியவர், நம் அருமை மாமா ஜவாஹர்லால் நேருதான் அந்தச் சிறுவன்!



