
சங்கப் புலவர் சன்மார்க்கம்
சாமி. சிதம்பரனார்
10. செய்ந்நன்றி அறம்
செய்ந்நன்றி அறிதல்: பிறர் செய்த நன்றியை மறவாமலி ருத்தல். பிறர் நமக்கொரு நன்மை செய்தால் அதை நாம் மறவா மல் மனத்திலே வைத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நாமும் அவர்க்கு நன்மை செய்வோம். ஆதலால்தான் செய்த நன்றியை மறக்கக் கூடாது. செய்நன்றியறிதலுக்கு இவ்வாறுதான் பலர் பொருள் உரைப்பர்.
ஆனால் செய்ந்நன்றி அறிதலிலே அடங்கியிருக்கும் சிறந்த உண்மைப் பொருள் வேறாகும். வேறாயினும் இப் பொருளுக்குத் தொடர்புள்ளதுதான். நமக்கு நன்மை செய்தவருக்குத்தான் நாம் நன்மை செய்யவேண்டுமென்றால் அதிலே சுயநலந்தான் பொதிந்து கிடக்கின்றது. நன்மையோ, உதவியோ புரிகின்றவர்கள்கூட, இவர் நமக்குப் பின்பு உதவி செய்யக்கூடியவர்தாமா என்று எண்ணித்தான் உதவி செய்வார்கள். இவ்வாறு செய்யும் உதவி உன்னதமான உதவியாக இல்லாமல் வாணிகமாக மாறிவிடக் கூடும்.
மக்கள் கடமையே உதவி செய்வதுதான். துன்புறுவோ ரைக் கண்டால் உள்ளம் இளகவேண்டும்; உடனே அவர்கள் துன்பம் தவிரும்படி உதவவேண்டும். இது மக்கள் கடமை. இரக்கமற்ற தன்மை மனிதப் பண்பே அன்று. இரக்கங் காட்டுதல் தான் மக்கட் பண்பின் ஊற்றுக்கேணி யாகும்.
இந்த மக்கட் பண்பு நம்மிடம் நிலைத்திருக்கவேண்டு மானால் நாம் பிறர் செய்த நன்றியை மறத்தல் கூடாது. மறவா மலிருந்தால்தான், நாம் துன்புறும்போது நமக்குப் பிறர் நன்மை செய்ததுபோல, பிறர் துன்புறும்போது அவர்க்கு நாம் நன்மை புரியவேண்டும்; நன்மைபுரிவது நமது கடமை என்ற எண்ணம் நமது உள்ளத்திலே பிறக்கும்.
பிறர்க்கு நன்மை புரிவதே ஒவ்வொரு மனிதனுடைய கடமையுமாகும் என்பதை வலியுறுத்தவே செய்ந்நன்றியறிதல் என்பதைச் சிறந்த பண்பாடாகப் பண்டைத் தமிழர்கள் போற்றினார்கள்.
இதைப்பற்றித் திருவள்ளுவர் மிகவும் அழுத்தமாகக் கூறுகின்றார்.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகர்க்கு
என்பது திருக்குறள். எந்த நன்றியை மறந்தவர்க்கும், அந்த நன்றியை மறந்த பாவத்திலிருந்து தப்பித்துக் கொள்ள வழியுண்டு. ஆனால் பிறர் செய்த நன்றியை மறந்தவனுக்கு அப் பாவத்தி லிருந்து தப்பித்துக் கொள்ள வழியேயில்லை என்பதுதான் இக்குறளின் பொருள்.
மக்களிடையிலே இந்த அறம் நிலவாவிட்டால் நாம் சிறப்பாக புகழ்ந்து பேசும் மனிதப் பண்பு என்பதே போய்விடும். பண்டைக்கால முதல் இச்சிறந்த குணம் மக்களிடம் குடிகொண் டிருப்பதால்தான் மக்களிடையே அன்பு நிலைத்திருக்கின்றது; கூட்டுறவு நிலைத்திருக்கின்றது; நாகரிகம் வளர்ந்து வருகின்றது.
திருவள்ளுவர் இதைப்பற்றி மேலும் கூறும்போது நன்மையை மட்டும் எப்பொழுதும் மறந்துவிடுதல் கூடாது; அப்படி மறந்துவிடுதல் நன்றாகாது; பிறர் தீமை செய்தால் அதை உடனே மறந்துவிட வேண்டும் என்று கூறுகின்றார். இக்கருத்து டையதுதான்,
நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
என்னும் குறள்.
ஒருவர் செய்த நன்றியை மறக்காமலிருந்தால் நமக்கும் நன்றி செய்யத்தான் தோன்றும். நினைப்பே செயலுக்கு வழி காட்டுவது. எண்ணமே வினைசெய்யத் தூண்டுவது. உள்ளத்திலே உயர்ந்த மாசற்ற நினைப்புள்ளவர்கள் தாம் உயர்ந்த செயல் களிலே ஈடுபடுவார்கள்.
பிறர் செய்த தீமைகளையே நினைத்துக் கொண்டிருப்பவர் களின் உள்ளத்திலே நல்ல எண்ணங்கள் குடியேற இடமே யில்லை. அவர்கள் உள்ளத்திலே, நமக்குத் தீமை செய்தவர் களுக்கு நாம் என்ன தீமை செய்யலாம்? எப்படிச் செய்யலாம்? எப்பொழுது செய்யலாம்? என்ற எண்ணங்களே உலவிக் கொண்டிருக்கும். சமயம் வந்த போது தமக்குத் தீமை செய்தவர் களுக்குத் தீமையைத் தான் செய்வார்கள். அவர்களும் எதிர்த்துத் தீமை செய்வார்கள். இப்படி இரு திறத்தாரிடையும் பகைமையும் தீமையும் வளர்ந்துகொண்டேதான் வரும். ஆதலால் தான் பிறர் செய்த தீமையை உள்ளத்திலே வைத்துக் கொள்ளக்கூடாது; அப்பொழுதே மறந்துவிடவேண்டும் என்று கூறினார் வள்ளுவர்.
செய்ந்நன்றி அறிதல் என்னும் இச் சிறந்த அறம் தமிழர் களின் சமுதாயத்திலே வழிவழியாக வளர்ந்து வந்த பண்பாகும். இந்த உண்மையை ஒரு புறநானூற்றுப் பாட்டும் வலியுறத்து கின்றது.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்பவன் ஒரு சிறந்த மன்னவன்; புலவர்களால் பாராட்டப்பட்டவன். அவனைப் பற்றிப் பாடிய ஆலத்தூர் கிழார் என்னும் புலவர் செய்ந்நன்றி அறிதலின் சிறப்பை வலியுறுத்தி இருக்கின்றார்.
ஆன்முலை அறுத்த அறன்இல் லோர்க்கும்,
மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்,
பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்,
வழுவாய் மருங்கின் கழுவாயும் உளஎன,
நிலம்புடை பெயர்வது ஆயினும் ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்என
அறம் பாடிற்றே ஆயிழை கணவ.
(புறநா. 34)
செய்ந்நன்றி மறத்தலின் தீமையை இச்செய்யுள் விளக்கமாக எடுத்துக் காட்டுகின்றது.
பசுவின் மடியை அறுப்பவர்கள் அறமற்றவர்கள்; மனித சமுதாயத்திற்கே மறம் புரிகின்றவர்கள். இரக்கமற்ற கடுஞ்சித்த முள்ளவர்கள்தான் பசுவின் மடியை அறுப்பார்கள். பால் கொடுக்கும் பசுவின் மடியை அறுப்பதனால் பசுவுக்கும் ஆபத்து; அந்தப் பசுவின் பாலை உண்டு வாழும் மக்களுக்கும் பாதகம் செய்வதாகும். ஆதலால் இக்கொடுஞ் செயலைச் செய்கின்ற வர்கள் அறநெறியையே அறியாதவர்கள் ஆவர்.
பெண்களின் கருவைச் சிதைப்பது பெரும் பாதகம் என்று பண்டைக் காலத்தில் கருதப்பட்டது. இக்காலத்தில் மக்கள் எண்ணிக்கையைக் குறைப்பதற்காகக் கருவை அழித்தல் சமுதாய முன்னேற்றத் திட்டங்களில் ஒன்றாக எண்ணப்படுகின்றது.
பண்டைக் காலத்திலே கருச் சிதைத்தலைக் கடும் பாதக மாகக் கருதியதற்குக் காரணம் உண்டு. அக் காலத்திலே மக்கள் எண்ணிக்கை குறைவு. மக்களும் தனித்தனிக் கும்பலாகப் பலப்பல இடங்களிலே வாழ்ந்து வந்தனர். அவர்களுக்குள் அடிக்கடி சண்டை சச்சரவுகள் நேர்வது உண்டு. ஒரு கும்பலுக்கும் மற்றொரு கும்பலுக்கும் மோதல் ஏற்பட்டுக் கொண்டே யிருக்கும். ஆதலால் ஒவ்வொரு குழுவினரும் தங்கள் கூட்டத்தைப் பெருக்கிக் கொள்ளவே விரும்பினர்; முயன்றனர். ஆதலால் பிள்ளைப் பேற்றைப் பெரிய செல்வமாகவும், கருச் சிதைவைக் கடும் பாவமாகவும் கருதினர். கருச்சிதைவு செய்வதை வெறுத்தனர்.
பார்ப்பார்கள் என்பவர்கள் பண்டைகாலத்திலே சமுதாய ஊழியர்களாயிருந்தவர்கள். தமிழர் சமுதாயத்திலே தோன்றிய வர்களிலே, தந்நலந் துறந்து மக்கள் முன்னேற்றத்திற்காக உழைத்து வந்தவர்கள் பார்ப்பார்களானார்கள். மக்கள் தீநெறிகளிலே படராமல் நல்வழிகளிலே நடக்க வழிகாட்டிய வர்கள் பார்ப்பார்களானார்கள். இத்தகைய அறிஞர்கள் சமுதாயத்திலே மிகவும் குறைவாக இருந்தனர். ஆகையால் இவர்களுக்கு எத்தகைய தீமையும் எவரும் இழைக்கக்கூடாது என்று எண்ணி வந்தனர். இவர்களுக்குத் தீமை செய்தவர் படுபாதகம் புரிந்தவர்களாகக் கருதப்பட்டனர்.
இந்தப் பசு, கருவுற்ற மகளிர், பார்ப்பார் ஆகியோர்க்குக் கொடுமை செய்தவர்களும் அக்கொடுமையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்; அதற்கான பரிகாரங்கள் – பிராயச்சித்தங்கள் – கழுவாய்கள் உண்டு.
ஆனால் இந்த உலகமே தலைகீழாக மாறுவதாயிருந் தாலும் சரி, பிறன் செய்த நன்மையை மறந்தோர்க்கு அப் பாதகத்திலிருந்து தப்பிக்கும் வழியே இல்லை; இவ்வாறு அறநூல்கள் அனைவரும் அறியப் பாடுகின்றன; இந்த உண்மையை நீ அறிந்துகொள்.
இதுதான் மேலேகாட்டிய செய்யுளில் அமைந்திருக்கும் பொருளாகும்.
அறம் பாடிற்று என்பதற்கு, அறநூல் ஆகிய திருக்குறள் கூறிற்று என்று பொருள் கூறுவோரும் உண்டு. இந்தப் புறநானூற்றுப் பாட்டின் பொருளைத் திருக்குறள் எடுத்துக் கூறியதா? அல்லது திருக்குறளின் பொருளை இந்தப் புறநானூறு விளக்கிக் கூறியதா? என்ற ஆராய்ச்சி நமக்கு வேண்டாம். செய்ந்நன்றி அறிதல் என்பதைச் சிறந்த அறமாகத் தமிழர் போற்றினர் என்பது உண்மை. இவ்வுண்மை எல்லா அறநூல் களிலும் காணப்படுகின்றது.



