சங்கப் புலவர் சன்மார்க்கம்
சாமி. சிதம்பரனார்

12. அறம் தரும் பயன்

இறந்த மக்கள் மீண்டும் பிறப்பர்; அவரவர்கள் செய்த நல்வினை தீவினைகளை அனுபவிக்கப் பிறப்பார்கள்; நல்வினை செய்தவர்கள் செல்வர்களாய்ப் பிறந்து சிறந்து வாழ்வார்கள்; அல்வினை செய்தவர்கள் ஏழையர்களாய்ப் பிறந்து இன்னல் அடைவார்கள். இது மறுபிறப்பு உண்டு என்பவர்கள் கூறும் கொள்கை.

இறந்தவர்கள் மீண்டும் பிறப்பதில்லை; மறுபிறவி எடுப்ப தில்லை. இவ்வுலகிலே பாவம் பண்ணியவர்களை ஆண்டவன் தண்டிக்கிறான்; புண்ணியம் புரிந்தவர்களை நல்லுலகிலே வாழ வைக்கின்றான். இது மறுபிறப்பு இல்லை என்பவர்களின் கொள்கை.

மறுபிறப்பு உண்டு; மறுபிறப்பு இல்லை; என்ற இந்த வழக்கு இன்று நேற்று எழுந்தது அன்று. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியது; இன்னும் முடிவு பெறாமல் நிற்பது. உலகில் இன்று நிலவி வரும் மதங்களிலே மறுபிறப்பு உண்டு என்னும் மதங்களும் உண்டு; மறுபிறப்பு இல்லையென்று கூறும் மதங்களும் உண்டு.

இந்த இரு கொள்கையினரும் தங்களுக்குள் வழக்கிடத் தொடங்கினால் அது தீராவழக்காகத்தான் முடியும். வாய்ப் போர் முற்றிக் கைப்போரில்தான் போகும். ஆனால் இவ்விரு கொள்கைகளும், ஊகத்தால் கூறுவனவேயன்றிக் கண்கூடாகக் கண்டு கூறப்படுவன அல்ல. ஆதலால்தான் இன்று வரையிலும் இவ்விரு கொள்கைகளும் தொடர்ந்து வழக்கிலும், வாதப் போக்கிலும் இருந்துவருகின்றன.

மறுபிறப்பு உண்டென்போரும், இல்லையென்போரும் ஒரு உண்மையை ஒத்துக் கொள்கின்றனர்; அதில் அவர்கள் முரண் படுவதில்லை. நாம் நல்வினைகளைத்தான் செய்ய வேண்டும்; தீவினைகளைச் செய்தல் கூடாது. நன்மை புரிந்தால்தான் நன்மை யடைவோம்; தீமை செய்தால் தீங்கடைவோம். நல்வினைகளே அறமாகும்; தீவினைகள் பாவமாகும் என்பதே அந்த உண்மை.

இந்த உண்மையை ஒத்துக்கொள்ளாத மதங்கள் ஒன்றுமே யில்லை. எல்லா மதங்களும் இந்த உண்மையைப் போதிக்கின்றன. எல்லா மதத் தலைவர்களும் இந்த உண்மையை மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டுமென்றே கூறிவந்தனர்; கூறி வருகின்றனர்.

இக்காலத்திலே மக்களிடையே கல்வியும் அறிவும் வளர்ந்து வருகின்றன. ஆதலால் இக்கால மக்கள் எத்தகைய மதக் கொள்கையினராயினும் சகிப்புத்தன்மையுடன் ஒன்றுபட்டுப் பழகுகின்றனர்; மத வேற்றுமை பாராட்டாமல் மனிதத் தன்மையுடன் பழகுகின்றனர். உலகப் போக்கையறியாத – நாகரிக வெளிச்சத்தை நன்றாக அறியாத-சிலரிடம் மதவெறுப்பும், வெறியும் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. ஆயினும், இதுவும் இன்னும் சில ஆண்டுகளில் மாறிவிடும் என்பதற்கான அறிகுறிகளைக் கண்டு வருகின்றோம்.

பண்டைக் காலத்திலே – தம் இனமே உயர்ந்தது; தம்முடைய பழக்க வழக்கங்களே சிறந்தவை; தம்முடைய கொள்கைகளே தெய்வீகமானவை; என்று நம்பிவந்த பண்டைக் காலத் திலேதான் – மதச் சண்டைகள் நடந்து வந்தன. மக்கள் காட்டு மிராண்டித்தனமாக வாழ்ந்த காலத்திலேதான் மதச் சண்டைகள் நடந்து வந்தன. மக்கள் மற்ற வகைகளிலே முன்னேறி யிருந்தாலும், மதவெறியைப் பின்பற்றியிருந்த காலத்திலேதான் மதத்தின் பெயரால் ஒருவரை ஒருவர் குத்திக் கொண்டும், வெட்டிக் கொண்டும் செத்து மடிந்தனர்.

இன்றுங்கூட மதவெறி காரணமாக மக்களுக்குள் வெறுப்பைப் பரப்புவோர் எவரேனும் இருந்தால் அவர்களை முழு மனிதத்தன்மை படைத்தவர்கள் என்று அறிஞர்கள் மதிப்பதில்லை. பழைய காட்டுமிராண்டித்தனம் இன்னும் அவர்களைப் பிடித்து ஆட்டி அலைக்கழிக்கின்றது என்றுதான் முடிவு கட்டுகின்றனர்.

மக்கள் இவ்வுலகில் ஒழுக்கத்துடன் வாழவேண்டும். ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். பாவ, புண்ணியம் அறிந்து நடக்க வேண்டும் என்பதற்கே மதங்கள் தோன்றின என்ற உண்மையை ஒப்புக் கொண்டவர்கள் ஒரு நாளும் மதப்போரில் குதிக்க மாட்டார்கள்; மதவெறியிலே மூழ்கி விடமாட்டார்கள். மதத்திலே அன்புள்ளவர்கள் மக்களிடம் கருணை காட்டு வார்கள். இதை நாம் உண்மையான மதப்பண்புள்ளவர்களிடம் கண்கூடாகக் காணலாம்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இந்த உண்மையைக் கண்டறிந்தார்கள். மதக் கொள்கை காரணமாக ஒருவர்க்கொருவர் வெறுப்புக் கொள்ள வேண்டாமென்றே அவர்கள் கூறிவந்தார்கள். ஆயிரக்கணக் கான ஆண்டுகளுக்கு முன்பே பலதிறப்பட்ட மதக் கொள்கை யினரும் தமிழ்நாட்டிலே ஒன்றுபட்டு வாழ்ந்தனர்; தமிழின் வளர்ச்சிக்கு உழைத்தனர்; தமிழ் மக்களின் உயர்வுக்கு பாடுபட்ட னர்; ஒற்றுமை வாழ்வுக்கு அடிகோலினர். இந்த உண்மைகளைச் சங்கத் தமிழ் நூல்களிலே காணலாம். இதைப் புறநானூற்றுப் பாட்டு ஒன்று மெய்ப்பிக் கின்றது. அப்பாடலின் பொருளைப் பார்ப்போம்.

குற்றம் நிரம்பிக் குடிகொண்டிருக்கும் அறிவுள்ளவர்கள் – ஆராய்ந்து காணும் தெளிவான அறிவில்லாதவர்கள் நல்வினை செய்யத் துணியமாட்டார்கள். நல்வினைகளைச் செய்வோமா? வேண்டாமா? என்றுதான் எண்ணிக் கொண்டேயிருப்பார்கள். இந்த ஐயம் அவர்கள் நெஞ்சை விட்டு நீங்காது.

யானையை வேட்டையாட எண்ணிச் செல்கின்றவன் அந்த யானையை எளிதிலே வேட்டையாடிப் பெறுதலும் கூடும். குறும்பூழ் என்னும் கௌதாரிப் பறவையை வேட்டையாடச் செல்கின்றவன் அந்த வேட்டை கிடைக்காமல் திரும்புவதும் உண்டு.

ஆகையால், உயர்ந்த செயல்களைச் செய்வதிலே விருப்பம் உள்ளவர்கள் தாம் செய்த நல்வினையின் பயனை அனு பவித்தலும் கூடும். அவர்கள் அந்த நல்வினையின் பயனை அனுபவிக்க நேர்ந்தால், நல்வினையோ தீவினையோ செய்வதற்கு இடமில்லாத சுவர்க்கத்திலே இன்பந் துய்ப்பார்கள்.

சுவர்க்கத்திலே இன்பந் துய்ப்பதற்குரிய நல்வினைகளைச் செய்யாதவர்கள் இவ்வுலகிலே மீண்டும் பிறந்து வறியராய்த் துன்புற்று வாழவும் கூடும்.

நல்வினை செய்தவர்கள் இவ்வுலகில் மீண்டும் பிறவார்; ஆயினும் அவர்கள் புகழ் இவ்வுலகை விட்டு அகலாது. இமய மலையின் சிகரத்தைப் போல் அவர்கள் புகழ் உயர்ந்து நிலை நிற்கும். பிறரால் சிறிதும் பழித்துப் பேசாத உடம்புடன் வாழ்ந்து இறப்பார்கள். இவ்வாறு இறத்தலே மிகவும் சிறந்த தாகும். ஆதலால், மறுபிறப்பு இருந்தாலும் சரி, இல்லை யானாலும் சரி, இவ்வுலகிலே நல்வினைகளை – நல்லறங்களைச் செய்து வாழ்வதே மக்கட்குரிய கடமையாகும். இதுவே மனிதத் தன்மையுமாகும்.

இவ்வாறு கூறுகிறது அச்செய்யுள். அச்செய்யுள் கீழ்வருவது:

செய்குவம் கொல்லோ நல்வினை? எனவே
ஐயம் அறாஅர் கசடுஈண்டு காட்சி
நீங்கா நெஞ்சத் துணிவு இல்லோரே,
யானை வேட்டுவன் யானையும் பெறுமே;
குறும்பூழ் வேட்டுவன் வறும்கையும் வருமே;
அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்குச்
செய்வினை மருங்கின் எய்தல் உண்டுஎனில்,
தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்;
மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்;
மாறிப் பிறவார் ஆயினும் இமயத்துக்
கோடுஉயர்ந் தன்ன தம்இசை நட்டுத்
தீதுஇல் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே.

(புற. 214)

இது கோப்பெருஞ் சோழன் என்னும் வேந்தன் பாடிய செய்யுள்.

மறுபிறப்பு உண்டு; இல்லை என்ற கவலை வேண்டாம். இவ்வுலகிலே நல்லறம் புரிந்தால் சுவர்க்கத்திலே இன்பம் உண்டு; இல்லையாயினும் இவ்வுலகிலே புகழ் உண்டு; புகழுடன் வாழா தான் மனிதன் அல்லன்; ஆதலால் நல்லறம் புரியுங்கள்; புகழுடன் வாழுங்கள் என்று அறிவுரை கூறுகின்ற அருமையான செந்தமிழ்ச் செய்யுள் இதுவாகும். பழந்தமிழரின் இக்கருத்தைப் பின்பற்றினால் பலதரப்பட்ட மதத்தினரும் ஒன்றுபட்டு உடன் பிறந்தார் போல வாழமுடியும்.

நல்வினை புகழ் தரும்; தீவினை பழி தரும்; ஆதலால் செய்யத்தக்கது நல்வினை. இதுவே தமிழர் கண்ட உண்மை: யாவரும் போற்றும் உண்மை.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !