
அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்
6. தமிழ் காத்தது
உலக வாழ்வு இன்பதுன்ப மென்னும் மேடு பள்ளங்கள் மேவியது. குலவிளக்கான அருள் மைந்தனின் இன்பம் நிறைந்த அம் மங்கல மனைவாழ்வில் மங்குல் படர்ந்தது! இராமையா பிள்ளை சிவனடி சேர்ந்தார்; குடும்பம் இடருற்றது. வந்த விதியை நொந்தென்: சிவன் செயலென்று மனதாறிச் சின்னம்மையார் மக்களுடன் தமது பிறப்பிடமான பொன்னேரியில் தம் அன்னையின் காப்பிற் சின்னாளிருந்தார். பிறகு குடும்பம் மூத்தமகன் சபாபதியுடன் சென்னையிற் குடியேறியது. அங்குச் சபாபதி, அரிய தமிழ் வாணரான காஞ்சி சபாபதி முதலியாரிடம் முறையாக முத்தமிழ் பயின்று தமிழாசிரியராகவும், சிவபுராண விரிவுரையாளராகவும் தொழில் நடத்தி, வந்ததைக் கொண்டு குடும்பத்தைத் தாங்கிவந்தார். பெரிய புராணப் பிரசங்கத்தில் அவர் பெயர் பெற்றோங்கிப் பல செல்வரின் ஆதரவை யடைந்தார். அவர் குடும்பத்தைத் தமிழ் காத்தது.



