
அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்
27. ஆண்டவனை வேண்டும் !
வள்ளலார் நாவில் ஊறும் அமுதகங்கை, ஆண்டவன் திருவடிக்கு மஞ்சன மாட்டுவதைத் தவிர வேறெந்த நரர் மீதும் ஒரு சிறு துமியும் தெறிப்பதில்லை. அதனாலன்றோ, அந்த மஞ்சன வூற்றை இன்று ஒரு தெய்விக மோகத்துடன் தமிழர் அள்ளிப் பருகி ஆவியின் வேட்கை தணிகின்றனர் !
கந்தசாமி முதலியார் என்றொருவர் தமது வறுமை நீங்கச் சில செல்வருக்குச் சீட்டுக் கொடுக்கும்படி வள்ளற் பெருமானை வேண்டினார்.
எட்டாலுங் கேளய லென்பாரை
நான்சிரித் தென்னைவெட்டிப்
போட்டாலும் வேறிடங் கேளேன்; என்
னாணை புறம்விடுத்துக்
கேட்டாலும் என்னை உடையா
னிடஞ் சென்று கேட்பனென்றே
நீட்டாலும் வாயுரைப் பாட்டாலுஞ்
சொல்லி நிறுத்துவனே !
என்று அருளி “ஆண்டவனையே வேண்டும்! உமது வறுமை கதிர் முன் பனியாகும். மாந்தரை வேண்டற்க!” என்றார் பொற்சபை அரசனின் செல்வப் புதல்வர்.
மற்றொருகால், தம் உறவினரும் மாணவருமான புராணிகர் சுந்தரம் பிள்ளை வறுமை தீர்த்தருள வேண்டிய போதும்,
திருவோங்கு பொற்சபையுஞ் சிற்சபையும்
நம்பெருமான் செய்யா நின்ற
உருவோங்கும் ஆனந்தத் தாண்டவமும்
கண்டினிதாங் குறைக; யானும்
தருவோங்கு தில்லைநகர்க் கோரிருபா
னாள்வரைக்குட் சார்கின் றேன்; நம்
இருவோங்கள் குறையும்இறைக் குரைத்தகற்றிக்
கொளலாம்; நீ யிளையேல் ஐயா !
என்று அருளினார்.



