
அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்
15. திருவாசகத்தேன்
மூன்றாவது, நம் வள்ளற் பெருமான் உயிர் போலப் போற்றி நின்ற நூல் திருவாசகம். ஆளுடையடிகள் மணிவாசகரின் திருவாசகத் தேனைப் பருகிப் பருகி,
வான் கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன் கலந்து, பால்கலந்து, செழுங்கனித்தீஞ்
சுவைகலந்து ஊன் கலந்து வுயிர்கலந்து
உவட்டாம லினிப்பதுவே !
என்று பரவசப் படுவார்.
பாரொடு விண்ணாய்ப் பரந்தஎம் பரனே,
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்!
சீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே !
ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன்
ஆண்டநீ அருளிலை யானால்
வார்கட லுலகில் வாழ்கிலேன் கண்டாய்,
வருகவென் றருள்புரி வாயே !
என்ற பாசுரத்தைப் பாடியும், பாடக்கேட்டும் வேசற்று மூர்ச்சித்து விழுவார். சாத்திரத்திற்குத் திருமந்திரம், தோத்திரத்திற்குத் திருவாசகம் என்பார்.
இவ்வாறு ஓதாது, ஓதரு மூதறிவெல்லாம் உணர்த்திய ஆண்டவன் தன் அருட்செல்வனின் தெய்வப் புலமையை எவ்வாறு விளக்கினானென இனிக் காண்போம்.



