
அருட்சுடர் வள்ளலார்
சுத்தானந்த பாரதியார்
நூன்முகம்
உலகம் உணரும் ஞானானந்த வாரிதியாய் இன்று புதுச்சேரியிலே தவம்பூண்டிருக்கும் அரவிந்தகோஷ் மகாமுனிவரது ஆசிரமத்திலே மோன நெறியில் யோகம்புரியும் சுத்தானந்த பாரதியாரையும் அப்பெரி யாரது தமிழ்ப் பணியையும் அவர் தமக்கெனப் படைத்துக் கொண்டுள்ள அன்பூற்றெடுக்கும் அருள் தமிழ் நடையையும் தமிழுலகம் நன்குணரும்.
இனிமையும் எளிமையும் ஆழமும் அகலமும் அன்பின் செறிவும் பொருந்திய அந்நடையிலே பாரதியார் சமீபகாலத் திலே இயற்றித் தமிழராவார் உள்ளுருகி இன்புறக் கற்று மெய்ப்பயன் பெறுமாறு வெளியிட்ட நூல்கள் மிகப்பலவாம்.
தமிழ்நாட்டு யோகியாகிய இப்பெரியார் தமது யோகத்தினிடையிலே அருட் செல்வத்தை யன்றி வேறொரு பொருளைக் கருதுவாராயின் அது தமிழ்ச் செல்வமே. இராமலிங்கப் பிள்ளையார் பாட்டுக்கள் பல இப் பெரியார்க்கு அவரது உண்மையுருவை விளக்கின.
வால்மீகர்க்கும் துளசிதாசருக்கும் கம்பநாடர்க்கும் முன்னின்று தனது சரித்திராமிருத சாரத்தை நடித்துக் காட்டிய இராமபிரான் போன்றே, பாரதியார் மனக் கண்ணின் முன்பு இராமலிங்க வள்ளலார் திருவிளையாடல்களின் உண்மைகள் பல தோன்றி நிலைபெற்று இச் சிறுபுத்தகத்தின் வாயிலாக வெளிவந்துள்ளன.
இராமலிங்க வள்ளலாரது திருச்சரிதம் புதுயுகத்துப்புண்ணிய புராணமே. இதனை ஆத்மானுபவத் தோடு கலந்து எழுதியுதவிய தமிழ்நாட்டு யோகி சுத்தானந்த பாரதியாருக்குத் தமிழுலகம் மிகவும் கடப்பாடுடையது.
அரசர் கல்லூரி,
புதுக்கோட்டை.
நா. கனகராஜையர், B.O. L.



